சென்னை போன்ற பெருநகரங்களில் வேலைவாய்ப்புக்கு வந்து பின்னர் அங்கேயே செட்டிலாகும் நபர்கள் அதிகம். ஐடி வேலை, அரசு வேலை, தொழில் வாய்ப்பு என சென்னைக்கு தனிமனிதராக வந்து ஏராளமானவர்கள் தங்களுக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி வாழ்கின்றனர். சென்னையில் செட்டிலாவது என்றாலே சொந்த வீடு தான்.
சென்னையில் அப்படி சொந்த வீட்டு கனவோடு இடம் வாங்கிய சுமார் 1 லட்சம் பேர் விழிபிதுங்கி நிற்கின்றனர். பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம் தான் இதற்கு காரணம். பள்ளிக்கரணை ஒரு சதுப்பு நில பகுதி. சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை அப்படியே பாதுகாத்தால் தான் பறவைகள் வந்து செல்லும் சுற்றுசூழலுக்கும், பாதுகாப்பாக இருக்கும். சென்னையின் வெள்ளநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் நிரப்பு, பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியம். ஆனால் எத்தனை பரப்பளவு கொண்டது இந்த சதுப்பு நிலம் என்பது தான் இப்போது குழப்பமே.

2007இல் 698 ஹெக்டேர் பரப்பு தான் சதுப்பு நிலம் என கூறினார்கள் திடீரென அதில் 559 ஹெக்டேரை சேர்த்து மொத்தம் 1,257 ஹெக்டேர் நிலம் பாதுகாக்கப்பட வேண்டிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த் ராம்சர் சதுப்பு நிலம் என 2022ஆம் ஆண்டு அறிவித்தார்கள். இந்த சூழலில் தேசிய பசுமை தீர்ப்பாயமோ அதுமட்டுமல்ல 1,257 ஹெக்டேர் ராம்சர் தளத்தை சுற்றியுள்ள 1 கிமீ தொலைவுக்கு எந்த ஒரு கட்டிட அனுமதியும் தரக்கூடாது என தடை போட்டுவிட்டது.
2007 முதல் 2024இல் நீதிமன்ற தீர்ப்பு வரையிலான காலக்கட்டத்தில் பள்ளிக்கரணையில் ஏராளமான ரியல் எஸ்டேட் மாற்றங்கள் வந்துவிட்டன. அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள், வீட்டு மனை திட்டங்கள் என 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இங்கே சொந்தமாக இடம் வாங்கி வைத்து அதற்கு பட்டாவும் வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் அரசு நிலம் உங்களுடையது தான் ஆனால் நீங்கள் அங்கே வீடு கட்ட முடியாது என கூறுகிறது.

உதாரணமாக 2015ஆம் ஆண்டில் தினேஷ் என்பவர் இங்கே 2,000 சதுர அடிக்கு ஒரு நிலம் வாங்கி பட்டாவும் வைத்திருக்கிறார். நமக்கு தான் நிலம் இருக்கிறதே என அவரால் இப்போது அங்கே வீடு கட்ட முடியாது ஏனெனில் அது தடை செய்யப்பட்ட ராம்சர் சுற்றளவுக்குள் வந்துவிட்டது. அதே போல ரமேஷ் என்பவர் ஏற்கனவே பாதி வீட்டினை கட்டிவிட்டார், ஆனால் அரசின் தடையை சுட்டிக்காட்டி அவருக்கு வழங்கிய கடனை வங்கி பாதியிலேயே நிறுத்தி கொண்டது, ஏற்கனவே வழங்கிய கடனையும் செலுத்த சொல்கிறது. முழுமை அடையாத சொந்த வீட்டுக்கு அவர் கடன் செலுத்துகிறார்.
ஏற்கனவே இந்த சுற்றளவுக்குள் சொந்தமாக வீடு வைத்திருப்பவர்களால் அந்த வீட்டை புதுப்பிக்க முடியாது. தொழில் செய்பவர்களோடு தொழிலுக்கான உரிமத்தை புதுப்பிக்க முடியாது. இந்த பகுதியில் கட்டுமான தடை உள்ளதால் இடம் வாங்குவதற்கும் யாரும் முன் வருவதில்லை என்பதால் ஏற்கனவே வாங்கிய வீட்டையும் நிலத்தையும் உரிமையாளர்களால் விற்க முடியவில்லை என்பது தான் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் புலம்பலாக உள்ளது.
ராம்சர் தளத்தின் எல்லைகளை அறிவியல் பூர்வமாக வரையறுக்காமல், ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு என பொதுவாக தடை விதிக்காமல் எந்த சர்வே எண் நிலங்கள் இந்த சுற்றளவுக்குள் வருகின்றன, எவை எல்லாம் வரவில்லை என்பதை அரசு அறிவிக்க வேண்டும் என மக்கள் கேட்டு கொண்டுள்ளனர். கிடைக்காத வீட்டிற்கு ,மாதம் தோறும் வட்டியும் அசலும் கட்டி கொண்டிருப்பதாக மக்கள் வேதனைப்படுகின்றனர்.
தமிழ்நாடு அரசு உண்மையாக பட்டா வைத்திருக்கும் மக்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும். அதே வேளையில் அரசு அதிகாரிகளோ நிலத்தை வகைப்படுத்தி எது எல்லாம் ராம்சர் தளத்திற்கு வருகிறது என்பதை வரையறை செய்யும் பணிகள் நடப்பதாக கூறுகின்றனர். கிரெடாய் அமைப்பும் நீதிமன்றத்தை நாடி இருப்பதால் விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.
ஒரு இடத்தில் நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு முன்பு அருகில் சதுப்பு நிலங்கள் உள்ளதா பிற்காலத்தில் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுமா என்பதை பலமுறை யோசித்து தான் முடிவெடுக்க வேண்டும் என்பதற்கு பள்ளிக்கரணை விவகாரமே பெரிய உதாரணம்.


Click it and Unblock the Notifications

