கெளஹாத்தி, அஸ்ஸாம்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு என குடியுரிமைப் பிரச்னைகளைச் சார்ந்தே சில விஷயங்களையும் கொண்டு வந்தது.
இந்த குடியுரிமைச் சட்டத் திருத்தம் மற்றும் பதிவேடுகள் தொடர்பாக ஆதரவாகவும், எதிர்பாகவும் கருத்துக்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
திருப்பம்
இந்த நேரத்தில், இந்திய வருமான வரித் துறை கொடுக்கும் பான் அட்டை, இந்திய வங்கிகள் கொடுக்கும் வங்கிக் கணக்கு சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட்கள், இந்திய அரசாங்கத்தின் நில வரிச் சான்றுகள் போன்ற நிதி சார் பத்திரங்கள் கூட ஒருவரின் குடியுரிமையை நிரூபிக்கப் போதாது எனச் சொல்லி தீர்ப்பளித்து இருக்கிறது அஸ்ஸாமின் கெளஹாத்தி உயர் நீதிமன்றம்.
என்ன பிரச்சனை
பக்ஸா மாவட்டத்தில் இருக்கும் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் (The Foreigners Tribunal), ஜபேதா பேகம் என்கிற பெண்ணுக்கு தன் குடியுரிமையை நிரூபிக்குமாறு ஒரு நோட்டீஸ் கொடுத்தது. இந்த நோட்டீஸுக்கு பதில் கொடுக்கும் விதத்தில் ஜபேதா பேகமும் சுமார் 14 விவரங்களைக் கொடுத்தார்.
கொடுத்த விவரங்கள்
பான் அட்டை,
ரேஷன் அட்டை,
2 வங்கிக் கணக்கு பாஸ் புக்குகள்,
ஜபேதா பேகத்தின் அப்பாவின் என் ஆர் சி பதிவுச் சான்று,
வாக்காளர் அடியாள அட்டை,
வாக்காளர் பட்டியலில் ஜபேதா பேகத்தின் தாத்தா பாட்டி பெற்றோர்கள் மற்றும் அவரின் பெயர்,
இது போக சில நில வரிச் சான்றுகள் என சுமார் 14 விவரங்களைக் பலதும் கொடுத்து இருக்கிறார்.
தீர்ப்பாயத்தின் பதில்
மேலே சொன்ன விவரங்களை ஜபேதா பேகம், வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயத்தில் சமர்பித்து இருக்கிறார். ஆனால் இவைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு ஜபேதா பேகம், இந்த (அவர் சொல்லும்) பெற்றோருக்குத் தான் பிறந்தார் என போதுமான ஆதாரங்களை சமர்பித்து நிரூபிக்கவில்லை எனச் சொன்னது வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயம்.
உயர் நீதிமன்றம்
வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து, அஸ்ஸாமின் கெளஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஜபேதா பேகம். இந்த மேல் முறையீட்டு வழக்கிலும், ஜபேதா பேகம், தான் சொல்லும் பெற்றோருக்குத் தான் பிறந்தார் என போதுமான ஆதாரங்களைச் கொடுக்கவில்லை என தீர்ப்பு வழங்கினார்கள்.
செல்லாது செல்லாது
அதோடு இந்திய வருமான வரித் துறை வழங்கும் பான் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் எல்லாம் ஒருவர் இந்திய குடிமகன் என்பதற்கான சான்று அல்ல என, 2016-ம் ஆண்டிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள்.