கொரோனா காலத்தில் மருந்துக் கடைகள் அத்தியாவசிய பொருட்கள் பிரிவில் இருக்கும் காரணத்தால் எவ்விதமான தடையும் இல்லாமல் நாடு முழுவதும் இயங்கி வந்த நிலையில், இந்தியாவில் ஆன்லைன் பார்மஸி வர்த்தகத்திற்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் ஆன்லைன் பார்மஸி துறைக்குள் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனால் 2021 ஆன்லைன் பார்மஸி துறை மிகப்பெரிய அளவிலான வர்த்தகப் புரட்சியை எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் அறிமுகம்
அமேசான் 2020ல் தனது ஈகாமர்ஸ் வர்த்தகத் தளத்தின் வாயிலாக மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யத் துவங்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் முன்னணி மருத்துவக் குழுமம் ஆக விளங்கும் அப்போலோ நிறுவனத்தின் கிளை பிரிவான அப்போலோ பார்மஸி நிறுவனத்தில் சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்து தனது வர்த்தகத்துடன் இணைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ரிலையன்ஸ் திட்டம்
ஜியோமார்ட் அறிமுகத்திற்குப் பின் ஆன்லைன் மருந்து விற்பனையில் இறங்க வேண்டும் எனத் திட்டமிட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வாயிலாக ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனமான மெட்பிளஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான விடாலிக் ஹெல்த் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளையும், தனது 4 கிளை நிறுவனங்களில் 100 சதவீத பங்குகளையும் சுமார் 620 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியுள்ளது.
100% பங்குகள்
இதன் மூலம் விடாலிக் ஹெல்த் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ள நிலையில் 2024ஆம் ஆண்டுக்குள் 80 சதவீத பங்குகளையும், வர்த்தகச் சூழ்நிலையைப் பொருத்து 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்தது.
பார்ம்ஈஸி நிறுவனம்
ஆகஸ்ட் மாதம் அமேசான், ரிலையன்ஸ் நிறுவனங்களுடன் போட்டிப்போட சந்தையில் இருக்கும் பிற ஆன்லைன் பார்மா நிறுவனங்கள் தங்களை வலிமையாக்க முடிவு செய்து, பார்ம்ஈஸி நிறுவனம் தனது சக போட்டி நிறுவனமான மெட்லைப் நிறுவனத்தை ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியது.
டாடா திட்டம்
இதேபோல் லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் மற்றும் ஈகாமர்ஸ் வர்த்தகத்திற்குள் நுழைய திட்டமிட்டுள்ள டாடா குழுமம் 1MG நிறுவனத்தைக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
2021ல் வேற லெவல்
இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்பு ஆன்லைன் பார்மஸி நிறுவனங்களின் வர்த்தகம் இரட்டிப்பு வளர்ச்சி அடைந்துள்ளதை அடுத்து பல முன்னணி நிறுவனங்கள் ஆன்லைன் பார்மா துறையில் இறங்கியுள்ளது. இதனால் 2021ல் ஆன்லைன் ரீடைல் வர்த்தகத்திற்கு அடுத்த ஆன்லைன் பார்மா முக்கிய இடத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.