சில வருடங்களுக்கு முன்பு பனாமா பேப்பர்ஸ் என்ற ரகசிய திட்டத்தில் பல இந்தியர்கள் வெளிநாடுகளில் குவித்து வைத்திருக்கும் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுப் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் இன்று பண்டோரே பேப்பர்ஸ் என்ற பெயரில் உலகின் மிக முக்கியமான 14 நிதி நிறுவனங்களில் ரகசிய புலனாய்வை 600க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் இணைந்து செய்துள்ளனர்.
இந்தப் புலனாய்வில் சுமார் 1.2 கோடி ஆவணங்கள் சிக்கியுள்ளது, மட்டும் அல்லாமல் ஜோர்டன் அரசர், செக் குடியரசு நாட்டின் பிரதமர் , அனில் அம்பானி, கிரிக்கெட் வீரர் சச்சின், நீரவ் மோடியின் தங்கை எனப் பல பெரும் தலைகள் ரகசியமாக வெளிநாட்டில் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
பண்டோரா பேப்பர்ஸ்
இந்தப் பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளிநாட்டில் சொத்துக் குவிப்பைத் தடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தக் கட்டமைப்பை பயன்படுத்திப் போலி நிறுவனங்கள், அமைப்புகள் மூலம் வெளிநாட்டில் சொத்துக்களைக் குவித்து வருகின்றனர். மேலும் உலக நாடுகள் இந்த மறைமுகமாகச் சேர்த்து வைக்கப்படும் பணத்தையும், சொத்துக்களையும், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம், தாமதம் செய்யும் காரணத்தால் இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
300 இந்தியர்கள்
பண்டோரா பேப்பர்ஸ் புலனாய்வு மூலம் கிடைத்த 1.2 கோடி ஆவணங்களில் 300க்கும் அதிகமான இந்தியர்களின் சொத்துக்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இதில் பொருளாதார முறைகேடுகள் செய்தவர்கள் மட்டும் அல்லாமல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பல பிரபலங்கள் இதில் அடங்கியுள்ளனர்.
அனில் அம்பானி
தற்போது பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளியான தரவுகள் அடிப்படையில் அனில் அம்பானி வெளிநாட்டில் நிறுவனங்களின் மூலம் சுமார் 18 சொத்துக்களை வைத்துள்ளார். ஆனால் இதே அனில் அம்பானி தான் பிரிட்டன் நீதிமன்றத்தில் தன்னிடம் எந்தச் சொத்துக்களும் இல்லை, தான் திவால் ஆனவர் என அறிக்கை தாக்கல் செய்தால். இந்தியாவிலும் இதே காரணத்தால் கூறி கடன் நிலுவை செலுத்துவதில் தாமதம் செய்து வருகிறார்.
பயோகான்
இந்தியாவின் முன்னணி பார்மா நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரன் முசம்தாப் ஷா-வின் கணவர், இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி இன்சைடர் வர்த்தகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுப் பங்குச்சந்தையில் இருந்து தடை செய்யப்பட்ட ஒருவர் மூலம் வெளிநாட்டில் டிரஸ்ட் அமைப்பு வைத்து இயங்கி வருகிறார்.
நீரவ் மோடி
இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கிவிட்டு நாட்டை விட்டு எஸ்கேப் ஆன வைர வியாபாரியான நீரவ் மோடி-யின் சகோதரி நாட்டை விட்டு எஸ்கேப் ஆவதற்கு ஒரு மாதம் முன்பு வெளிநாட்டில் ஒரு டிரஸ்ட் அமைப்பு துவங்கியுள்ளது தற்போது பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளியாகியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர்
2016ல் பானாமா பேப்பர்ஸ் வெளியான பின்பு கிரிக்கெட் உலகின் கடவுள் ஆகப் பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது வெளிநாட்டுக் கணக்கை மூட கோரிக்கை வைத்துள்ளதும் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஆய்வின் போது வெளியாகியுள்ளது.
ஜோர்டன் அரசர்
மேலும் ஜோர்டன் நாட்டின் அரசர் அப்துல்லா II ரகசியமாக அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் சுமார் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சொத்துக்களைக் குவித்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான்
பண்டோரா பேப்பர்ஸ் புலனாய்வில் இந்தியர்களைக் காட்டிலும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாகச் சிக்கியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதமர் இம்ரான் கானின் முக்கிய அதிகாரிகள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வர்த்தகத் தலைவவர்கள், மீடியா நிறுவன உரிமையாளர்கள் உட்படச் சுமார் 700 பேர் இதில் சிக்கியுள்ளனர்.
2016க்கு பின்பு
2016 பனாமா பேப்பர்ஸ் வெளியான பின்பு உலக நாடுகளில் சேர்ந்த பலர் தங்களது வெளிநாட்டு கணக்குகளை மறுசீரமைப்பு செய்யவும், மூடவும், வேறு நாடுகளுக்கு மாற்றவும், சொத்துக்களை விற்பனை செய்யவும், பணத்தை இந்தியா அல்லது பிற நாட்டு கணக்குகளும் மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஆய்வில் கிடைத்த முக்கியமான தகவலாக உள்ளது.