சென்னையின் 2வது விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்துடன் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு பரந்தூர் பகுதியை தேர்வு செய்த நிலையில், இதற்கு இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்த நிலையில் விஜய் ஆட்சிக்கு வந்த உடன் பரந்தூர் விமான நிலையத்தை இப்பகுதியில் அமைக்கும் முடிவை கைவிட்டது மட்டும் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் மின்சார துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தங்களுடைய நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை என தெரிவித்தார். இங்கு தான் பிரச்சனை துவங்கியது.

பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைத்தால் இப்பகுதியில் இருக்கும் 12 ஏரிகள், 20 குளங்கள், பல நீர்தேக்கம் மற்றும் மழைநீர் சேமிக்கும் அமைப்புகள் பாதிக்கப்படும் என்பதை மையமாக வைத்து தான் ஏகனாபுரம் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதுமட்டும் அல்லாமல் அதை அழித்துவிட்டு விமான நிலையம் கட்டினால் மழைக்காலத்தில் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்படும் என்ற கருத்தின் அடிப்படையில் ஏகனாபுரம் மக்கள் ஓன்று கூடி போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் விஜய் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இத்திட்டம் கைவிடப்பட்டத்தால் ஏகனாபுரம் மக்களின் போராட்டம் வெற்றிக்கண்டது. ஆனால் இப்பகுதியில் பலர் தங்களுடைய இடத்தை தமிழ்நாடு அரசுக்கு விற்பனை செய்துள்ளனர்.
முந்தைய திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு இப்பகுதியில் பலரின் நிலத்தை சந்தை விலையை காட்டிலும் 3-4 மடங்கு அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளது. இது மட்டும் அல்லாமல் நிலத்தை கொடுத்தோருக்கு மாற்று இடத்தில் வீடு மற்றும் குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை போன்ற வாக்குறுதியும் அளித்துள்ளது.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட நிலத்தில் விமான நிலையம் அமைக்காமல் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படுவதால் இப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டு உள்ளதாக டெக்கான் ஹெரால்டு தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் குதிக்கும் மக்கள், இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்கும் காரணத்தால் தங்களுடைய நிலத்திற்கு கூடுதல் தொகை இழப்பீடாக வேண்டும் அல்லது கைப்பற்றப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயம் செய்ய குத்தகைக்கு விட வேண்டும் என தெரிவித்துள்ளனர். மீண்டும் விவசாயத்திற்கு நிலத்தை அளிக்கப்படுவது மூலம் தொழிற்சாலை மூலம் இப்பகுதி மாசுப்படாது என தெரிவித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் சிப்காட் வருவதற்கும் தற்போது பரந்தூர் மக்கள் முட்டுக்கட்டை போட்டு உள்ளனர்.
அரசு தரப்பில் இருந்தும் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில் அரசு அதிகாரிகளும் இதுக்குறித்து வாயை திறக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் பரத்தூரில் கைப்பற்ற இடத்தில் அரசு என்ன செய்யும்..? விமான நிலைய திட்டத்தை மீண்டும் கையில் எடுக்கப்படுமா..? இப்படி பல கேள்விக்களுக்கு மத்தியில் மக்கள் முதல் தொழிற்துறையினர் வரையில் உள்ளது.
பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க தேவைப்படும் இடம் 5746 ஏக்கர், இதில் 1700 நிலத்தை TIDCO ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. 2500 ஏக்கர் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே உள்ளது. எஞ்சியுள்ள 2500 ஏக்கர் நிலம் தான் கைப்பற்ற வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பரத்தூர் திட்டம் முடக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு தேவையான 80 சதவீத நிலம் கண்டறியப்பட்டு உள்ளது, ஆனால் ஏகனாபுரம் பகுதி மட்டுமே கைப்பற்றப்படவில்லை.
பரந்தூரில் சுப்ரமணியம் என்பவர் தனது 4.5 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசுக்கு விற்றது மூலம் 2.5 கோடி ரூபாய் பெற்றுள்ளார் என்றும் டெக்கான் ஹெரால்டு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications