முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் ஓசூர், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் முன்னெடுக்கப்பட்ட விமான நிலைய திட்டங்களும் கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க கடந்த திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆய்வு பணிகள் முடிந்து விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய அரசு சார்பாகவும் பரந்தூரில் விமான நிலையம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இருந்தாலும் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த தேர்தலில் தனது அரசு அமைந்தால் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என கூறி இருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விஜய் தலைமையிலான அரசு அமைந்தது.
இந்த சூழலில் தான் முதலமைச்சர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாகவும் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க மாற்று இடம் தேடுவதாகவும் கூறியுள்ளார். இது விமான நிலைய திட்டத்தை எதிர்த்ததவர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும், இந்த விமான நிலையம் வரும் என நம்பி முதலீடு செய்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதால் பல்வேறு முதலீடுகளும் தமிழ்நாட்டை விடுத்து வேறு மாநிலங்களுக்கு செல்லும் என்றும் பலரும் கருத்து கூறுகின்றனர். இந்த சூழலில் ஓசூர், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் முன்னெடுக்கப்பட்ட விமான நிலைய திட்டங்களை விஜய் அரசு தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து சட்டசபையில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் இருக்கிறது, அதை செயல்படுத்தி காட்டுவோம் என கூறினார். இதன் மூலம் ஓசூர் விமான நிலைய திட்டத்தை விஜய் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் ஓசூர் விமான நிலையத்தை செயல்படுத்துவது அத்தனை எளிதல்ல.
ஏனெனில் பெங்களூரு விமான நிலைய அனுமதி பெற வேண்டும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும். இந்த இரண்டு சிக்கல்களையும் தீர்த்தால் மட்டுமே ஓசூர் விமான நிலைய திட்டம் செயல்பாட்டுக்கு வரும். ஓசூர் மட்டுமில்லாமல் ராமேஸ்வரம் விமான நிலைய திட்டமும் தொடரும் என அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்காஜ்க கும்பரம், மாணிக்கநேரி ஆகிய இரு இடங்களை இந்திய விமான நிலையங்களின் ஆணையம் ஆய்வு செய்ததில், மாணிக்கநேரியில், 600 ஏக்கர் இடம் பொருத்தமானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என கூறிய அவர், மத்திய அரசுக்கு ஒப்புதல் கோரி கருத்துரு அனுப்பப்பட்டு, நிலம் எடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications

