சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்பட இருந்தது. கடந்த திமுக ஆட்சியில் பரந்தூர் விமான நிலைய பணிகள் மும்மரமாக நடந்த நிலையில் , விஜய் தலைமையிலான தவெக அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டுவிட்டது.
பரந்தூரில் விமான நிலையம் அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் விவசாயத்திற்கு எதிரான திட்டங்களுக்கு தனது ஆட்சியில் அனுமதி இல்லை என கூறி முதலமைச்சர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். இந்நிலையில் இந்த பகுதியில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பரந்தூர் அருகே உள்ள மதுரமங்கலத்தில் சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலகளவில் அதிகரித்து வரும் அதிநவீன மின்னணு சாதனங்கள் மற்றும் செமி கண்டக்டர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் இந்த சிப்காட் அமைக்கப்பட உள்ளது. பரந்தூர் அருகே உள்ள மதுரமங்கலத்தில் சுமார் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட தொழிற்பூங்கா உருவாக்கப்பட உள்ளது.
முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, இந்த திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொழிற்பூங்காவில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலைகளுடன் சேர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், இது தமிழகத்தின் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக சுமார் 8.3820 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
உலக அளவில் தற்போது செமி கண்டக்டர்களுக்கு தான் தேவை அதிகரித்துள்ளது. நாம் பயன்படுத்தும் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களுக்கும் இவை. இந்தியா விரைவில் செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாற உள்ளது. இதற்காக பிரத்தியேக திட்டத்தையே மத்திய அரசு வகுத்துள்ளது.
இந்நிலையில் தான் செமி கண்டக்டர் உற்பத்தி பூங்காவாக இதனை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடும் முக்கியமான செமி கண்டக்டர் மையமாக மாறும். இது பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வேலைவாய்ப்புகளை பெருக்கும்.பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டதால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி தடைபட்டு விட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமயிலான அரசு இந்த சிப்காட் முயற்சியை கையில் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications


