இந்திய வரலாற்றில் எந்த ஒரு அரசும், எந்த ஒரு நிதியமைச்சரும் சந்திக்காத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் பட்ஜெட் அறிக்கையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரானது 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஜன. 29 முதல் பிப். 15 வரை முதல் கட்டமாகவும் மார்ச் 8 முதல் ஏப். 8 வரை 2-ம் கட்டமாகவும் இக்கூட்டத் தொடர் நடைபெறும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி 2021-2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பட்ஜெட் அறிக்கையை உருவாக்குவதற்கான தரவுகளை டிசம்பர் மாதம் சேகரிக்கத் துவங்கியுள்ள நிலையில், கடும் சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்காகப் பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்கும் நிர்மலா சீதாராமன் அவர்களின் (A-Team) குழுவில் பல முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பட்ஜெட் அணி
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவில் மத்திய நிதியியல் செயலாளரான அஜய் பூஷன் பாண்டே, பொருளாதார விவகாரத்துறை செயலாளரான தருண் பஜாஜ், செலவின செயலாளரான டிவி சோம்நாத், வங்கித்துறை செயலாளர் டெபாஷிஷ் பாண்டா, DIPAM அமைப்பின் செயலாளர் டிகே பாண்டே, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரான கேவி சும்பிரமணியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு
கொரோனா பாதிப்பால் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள சாமானிய மக்கள் மத்தியில் தற்போது இந்த வருட பட்ஜெட்-ல் வருமான வரியில் தளர்வு இருக்குமா என்ற மிக முக்கியமான கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கொரோனா தொற்று
நடப்பு நிதியாண்டின் துவக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டின் உற்பத்தி, சேவைத் துறைகள் முழுமையாக முடங்கி வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது.
இந்த வீழ்ச்சியிலிருந்து இன்னும் முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகிறது இந்தியப் பொருளாதாரம்.
வளர்ச்சிப் பாதை
நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல 2019-20 நிதியாண்டை விடவும் அதிகமாகச் செலவு செய்ய வேண்டும், இதேபோல் நிதிப் பற்றாக்குறையைத் தற்போது இருக்கும் 13 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் என்ற அளவீட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
4 முக்கியமான விஷயங்கள்
1. தனிநபர் வருமான வரித் தளர்வு அளவீட்டைக் குறைக்கப்படும்.
2. ஒரு முறை ஒரு வருடம் என்ற முறையில் கார்பரேட் வரி மீது சர்சார்ஜ் விதிக்கப்படும்.
3. அனைத்து துறையிலும் அரசின் சேவை கட்டணங்கள், வாடிக்கையாளர் கட்டணங்களில் உயர்வு.
4. அரசு கையிருப்பில் இருக்கும் நிலங்களைத் தொழிற்துறை வளர்ச்சிக்காக விற்பனை செய்ய வேண்டும்.
பதில் பிப்ரவரி 1
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையை வைத்துப் பார்க்கும் போது வருமான வரி குறைக்கப்படுவதற்குச் சாத்தியமில்லை என்பது தெரிகிறது. ஆனால் மத்திய நிதியமைச்சர் மக்களுக்குத் தனது பட்ஜெட் அறிக்கையில் சர்ப்ரைஸ் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி 1, 2021 வரை காத்திருப்போம்..!