தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
இதனை கணக்கில் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்து கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் விமான டிக்கெட்டுகளும் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி
தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படும் வகையில் விமான கட்டணங்கள் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருமடங்கு கட்டணம்
குறிப்பாக டெல்லி, பெங்களூர் மற்றும் மும்பையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான விமான டிக்கெட் கிட்டத்தட்ட இருமடங்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூடுதல் விமானம்
ஆனால் அதே நேரத்தில் தீபாவளி கொண்டாட பயணம் செய்யும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் விமான நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளன. நான்கு விமான போக்குவரத்து நிறுவனங்கள் தீபாவளிக்கு முந்தைய நாளில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளன.
கூடுதல் விமானம்
அக்டோபர் 20ஆம் தேதி முதல் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 23ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு தர்பங்கா-மும்பை இடையே 3 விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேபோல் தீபாவளி பயணம் முடிந்து மீண்டும் அலுவலகம் திரும்பும் பொது மக்களின் நலனுக்காக அக்டோபர் 28. 29 ஆம் தேதி கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் உயர்வு
அக்டோபர் 20 ஆம் தேதி டெல்லியில் இருந்து தர்பங்கா செல்ல விமான கட்டணம் ரூ.10,920 என உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அக்டோபர் 22 ஆம் தேதி டெல்லியில் இருந்து தர்பங்கா செல்ல விமான கட்டணம் ரூ.20,156 என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு - தர்பங்கா விமானக்கட்டணம் ரூ.21,000 என்றும், அதேபோல் மும்பை - தர்பங்கா விமான கட்டணம் ரூ.21,000 என உயர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.