இந்திய குடிமகன் என நிரூபிக்க ஆதார் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்டவை இருந்தாலே போதும் என்பது பெரும்பாலான இந்திய மக்களின் நம்பிக்கை. ஆனால் மத்திய அரசின் ஒரு அறிவிப்பு கோடிக்கணக்கான மக்களை குழப்பமடைய வைத்துள்ளது. மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே அது உங்களின் இந்திய குடியுரிமையை நிரூபிக்காது என கூறியுள்ளது.
ஆதார் போன்ற ஆவணங்களும் கூட இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்கள் இல்லை என மத்திய அரசு கூறுகிறது. அப்படி என்றால் ஒரு நபர் தான் ஒரு இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க எந்த ஆவணம் தான் செல்லும் என்பது தான் பெரும்பாலான இந்தியர்களின் கேள்வி. அதற்கான பதிலை நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆதார்: இது இந்தியாவில் குடியிருப்பவர்களுக்கான அடையாளச் சான்று மட்டுமே. இது ஒரு நபர் இந்தியாவில் வசிக்கிறார் என்பதை நிரூபிக்கிறதே தவிர, அவர் இந்தியக் குடிமகன் என்பதை உறுதிப்படுத்துவதில்லை. வெளிநாட்டவர்கள் கூட உரிய நிபந்தனைகளுடன் ஆதார் பெற முடியும்.
வாக்காளர் அடையாள அட்டை: இது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுவது. ஒரு நபர் அந்தப் பகுதியில் வாக்களிக்கத் தகுதியுடையவர் என்பதை இது குறிக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதும், அந்த அட்டை இருப்பதும் ஒருவரை இந்திய குடிமகனாக உறுதிப்படுத்த போதுமான சட்டப்பூர்வமான சான்றாகாது என்று நீதிமன்றங்கள் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன. இது இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு ஆவணமாக இருந்தாலும் சில சமயங்களில் இதனை ஏற்க மறுக்கின்றனர்.
பாஸ்போர்ட் : இது ஒரு பயண ஆவணம். இந்திய குடிமகனுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுவது உண்மைதான் என்றாலும், சில சிறப்புச் சூழ்நிலைகளில் அல்லது ஆவணச் சரிபார்ப்பில் குறைபாடுகள் இருந்தால், அதை மட்டுமே வைத்து ஒருவரது குடியுரிமையை முழுமையாக உறுதிப்படுத்த முடியாது என மத்திய அரசு விளக்கம் தருகிறது.
இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955-ன் படி, ஒருவர் இந்தியக் குடிமகனா என்பதைத் தீர்மானிக்க பிறப்புச் சான்றிதழ், வம்சாவளிச் சான்றிதழ் (Descent), பதிவு (Registration) அல்லது இயற்கை வழி குடியுரிமை (Naturalization) ஆகியவற்றின் அடிப்படையில் சட்டபூர்வமான ஆவணங்களே தேவைப்படுகின்றன. சட்டப்பூர்வமாக இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கான கடுமையான நடைமுறைகளை வெற்றிகரமாக நிறைவு செய்த வெளிநாட்டினருக்கோ அல்லது இந்திய வம்சாவளியினருக்கோ இச்சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
பிறப்பால் இந்தியக் குடிமக்களாக உள்ள பெரும்பான்மையினருக்கு, பிறப்புச் சான்றிதழ் ஒரு அடிப்படைச் சான்றாக அமைகிறது. இருந்தாலும் இதில் முக்கியமான சட்டரீதியான நிபந்தனைகள் உள்ளன. இந்தியாவின் குடியுரிமைச் சட்டங்கள் காலப்போக்கில் மாறியுள்ளதால், குடியுரிமைக்கான சான்றாகப் பிறப்புச் சான்றிதழின் செல்லுபடியாகும் தன்மை என்பது ஒருவர் பிறந்த ஆண்டைப் பொறுத்தே அமைகிறது.
26 ஜனவரி 1950 மற்றும் 1 ஜூலை 1987 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பிறந்தவர்களுக்கு, பிறப்பு சான்றிதழ் மட்டுமே முழுமையான சான்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அக்காலத்தில் பெற்றோரின் குடியுரிமை எதுவாக இருந்தாலும், இந்திய மண்ணில் பிறந்தார்கள் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டது.
1 ஜூலை 1987 மற்றும் 3 டிசம்பர் 2004 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களுக்கு, பிறப்பு சான்றிதழுடன் கூடுதலாக ,அவர்கள் பிறந்த சமயத்தில் அவர்களது பெற்றோரில் குறைந்தது ஒருவராவது அங்கீகரிக்கப்பட்ட இந்தியக் குடிமகனாக இருந்திருக்க வேண்டும் என்பதற்கான சான்று அவசியம்.
3 டிசம்பர் 2004-க்குப் பிறகு பிறந்தவர்களை பொறுத்தவரை, பிறப்புச் சான்றிதழுடன் பெற்றோர் இருவரும் இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும்; அல்லது பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகனாகவும், மற்றொருவர் சட்டவிரோதக் குடியேறியாக இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.
ஆதார், பாஸ்போர்ட் போன்றவை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படும் ஆவணங்களே தவிர நம் குடியுரிமை சான்றாக பெரும்பாலான சமயங்களில் பயன்படுத்த முடியாது. அப்படி என்றால் இந்திய குடிமக்கள் அனைவரும் குடியுரிமை சான்றினை நிரூபிக்கும் ஆவணங்களை பெற்று வைத்து கொள்ள வேண்டுமா என்றால் இல்லை. ஏதேனும் ஒரு சமயத்தில் நீங்கள் உண்மையாகவே இந்திய குடிமகன் தானா என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அங்கே ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை ஏற்கபடாத பட்சத்தில் மேற்கூறிய ஆவணங்கள் தேவைப்படலாம்.


Click it and Unblock the Notifications


