டெல்லி: இந்தியா ஒரு விசித்திர சந்தை. இந்த சந்தையால் யார் எப்போது பெரிய ஆள் ஆவார்கள் என்று யாருக்குமே தெரியாது. உதாரணமாக 3 வருடத்துக்கு முன் வந்த ஜியோ சுமார் 30 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்து, இன்று இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறதே அந்த மாதிரி.
அந்த வரிசையில் பதஞ்சலி ஆயுர்வேத் என்கிற பாபா ராம்தேவின் நிறுவனத்தையும் சொல்லலாம். இந்தியாவில் அத்தனை எளிதில் கால் பதிக்க முடியாத எஃப் எம் சி ஜி நிறுவனத்திலேயே கால் பதித்து கோல்கேட் பால்மாலிவ், நெஸ்ட்லே, ஹிந்துஸ்தான் யுனிலிவர் என எல்லா எஃப் எம் சி ஜி ஜாம்பவான்களையும் ஒரண்டைக்கு இழுத்த பெருமை நம் பதஞ்சலி நிறுவனத்துக்கு உண்டு.
சமீபத்தில் கூட ருச்சி சோயா என்கிற நிறுவனத்தை வாங்க, அதானி உடனேயே போட்டி போட்டு வென்றது என்றால் பதஞ்சலியின் செல்வாக்கையும், பண பலத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
இப்போது அந்த ருச்சி சோயா எண்ணெய் நிறுவனத்தை, பதஞ்சலி நிறுவனம் வாங்க சுமார் 3,200 கோடி ரூபாய் பணம் தேவைப்பட்டது. அந்த 3,200 கோடி ரூபாய் பணத்தை எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கடன் கொடுத்து உதவி இருக்கிறார்கள் என பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவே சொல்லி இருக்கிறார்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் இருந்து 1,200 கோடி ரூபாய், பஞ்சாப் நேஷனல் பேங்கில் இருந்து 600 கோடி ரூபாய், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் இருந்து 600 கோடி ரூபாய், சிண்டிகேட் பேங்கில் இருந்து 400 கோடி ரூபாய், அலஹாபாத் பேங்கில் இருந்து 300 கோடி ரூபாய் என கடன் வாங்கி இருக்கிறார்களாம்.
கடந்த டிசம்பர் 2017-ல் ருச்சி சோயா எண்ணெய் நிறுவனம் வாங்கிய கடனை கட்ட முடியாமல் திவால் ஆனது. அப்போது ருச்சி சோயாவுக்கு கடன் கொடுத்தவர்கள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் புகார் செய்தார்கள். நிறுவனம் ஏலத்துக்கு வந்தது.
கடந்த ஏப்ரல் 2018-ல், ருச்சி சோயா நிறுவனத்தை வாங்க பதஞ்சலி 4,350 கோடி ரூபாய்க்கு முன் வந்ததை ஏற்றுக் கொண்டார்கள் ருச்சி சோயாவுக்கு கடன் கொடுத்தவர்கள். ருச்சி சோயா நிறுவனத்துக்கு கடன் கொடுத்தவர்கள் சுமாராக 60% கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தகக்து.