பதஞ்சலி ஆயுர்வேத் என்கிற பெயரில், யோகா குரு பாபா ராம் தேவ், இந்தியா முழுக்க எஃப் எம் சி ஜி பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறார்.
தற்போது இந்தியாவின் எதிர்கால மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சோலார் பக்கம் திரும்பி இருக்கிறார்.
பதஞ்சலி கம்பெனி, தற்போது சோலார் உபகரணங்களையும் உற்பத்தி செய்யப் போகிறார்களாம். அதற்கு கணிசமாக முதலீடுகளையும் செய்து இருக்கிறார்களாம். ஆலை எங்கு வரப் போகிறது? யார் வாடிக்கையாளர்? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
100 கோடி முதலீடு
இந்தியாவின் வடக்கில், இமய மலைச் சாரலில் அமைந்து இருக்கும் ஹரித்வார் நகரத்தைச் சேர்ந்த பதஞ்சலி கம்பெனி, க்ரேட்டர் நொய்டா தொழிற்சாலை பகுதிகளுக்கு அருகில் இருக்கும் பெசிலிட்டியில், சோலார் உபகரணங்களை உற்பத்தி செய்ய, சுமாராக 100 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறார்களாம்.
பதஞ்சலி தரப்பு
சோலார் உற்பத்திக்கு இதுவரை 50 - 60 கோடி ரூபாயை முதலீடு செய்து இருக்கிறோம். மொத்த முதலீடு சுமாராக 100 கோடி ரூபாயைத் தொடும். சோலார் ஆலை வரும் ஜனவரியில் திறக்கப்படலாம் என பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் & முதன்மைச் செயல் அதிகாரியான ஆச்சார்யா பாலகிருஷ்ணா பிடிஐ செய்தி நிறுவனத்துக்குச் சொல்லி இருக்கிறார்.
வியாபார விரிவாக்கம்
கிரேட்டர் நொய்டா ஆலையில் சோலார் பேனல்களை உற்பத்தி செய்வோம். எதிர்காலத்தில் சிப்புகள் (Chip) மற்றும் போட்டோ வோல்டிக் செல்கள் (Photovoltaic Cell) போன்றவைகளையும் உற்பத்தி செய்ய, திட்டம் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் & முதன்மைச் செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா.
ஜெர்மனி & சீனா
க்ரேட்டர் நொய்டா ஆலையில் சோலார் உபகரணங்கள் ஆலைக்கான இயந்திரங்கள் ஜெர்மனி & சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஆலைகளில் பொருத்தப்பட்டு வருகின்றனவாம். அதெல்லாம் இருக்கட்டும், ஏன் திடீரென சோலார் உபகரணங்கள் உற்பத்தியில் பதஞ்சலி நிறுவனம் குதித்து இருக்கிறது? என்கிற கேள்விக்கும் ஒரு சுவாரஸ்ய பதில் சொல்கிறது பதஞ்சலி தரப்பு.
சோலார் பேனல் & தெரு விளக்கு
பதஞ்சலி ஆயுர்வேத் கம்பெனி, சோலார் பேனல்கள் மற்றும் தெரு விளக்குகளை வாங்கிக் கொண்டு இருந்தார்களாம். இந்த சோலார் சம்பந்தப்பட்ட எல்லாமே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது தெரிய வந்ததாம். எனவே, சோலார் உபகரணங்களை உற்பத்தி செய்யும் முடிவுக்கு வந்ததாகச் சொல்கிறார் ஆச்சார்யா பாலகிருஷ்ணா.
உற்பத்தி பதஞ்சலி கம்பெனிக்கே
ஆரம்பத்தில், க்ரேட்டர் நொய்டா சோலார் உபகரண ஆலையில், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், பதஞ்சலி கம்பெனியே வாங்கிக் கொள்ளும். பதஞ்சலி ஆயுர்வேத் கம்பெனிக்கு சொந்தமான, எல்லா உற்பத்தி ஆலைகளிலும் சோலார் பேனல்கள் பொருத்தப்படும். அதன் பிறகு வணிக ரீதியாக வாங்க ஆள் வந்தால் விற்பனை செய்யத் தொடங்குவோம் எனச் சொல்லி இருக்கிறார் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் & முதன்மைச் செயல் அதிகாரி.
பல துறை வியாபாரம்
பதஞ்சலி ஆயுர்வேத் கம்பெனி, எஃப் எம் சி ஜி மட்டுமின்றி, கல்வி, ஹெல்த் கேர் போன்ற பல துறைகளிலும் இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் பதஞ்சலி கம்பெனியின் டேர்ன் ஓவர் 10,500 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது இந்த நிதி ஆண்டில் அதை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்கிற எதிர்பார்க்கில் இருக்கிறது பதஞ்சலி.