AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் புதிய வளர்ச்சியை பெற்று வருகிறது. ஏஐ வளர்ச்சியால் நன்மைகள் இருந்தாலும் பேராபத்தும் காத்திருக்கிறது என குரல்கள் எழ தொடங்கியுள்ளன.
ஏஐ வளர்ச்சியை உடனடியாக தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என அமெரிக்காவின் மூத்த செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் எச்சரித்துள்ளார். பெர்னி சாண்டர்ஸ், உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்களின் தலைவர்களான ஓபன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன், ஆன்ந்திராபிக் தலைவர் டாரியோ அமோடி , மெடாவின் மார்க் ஜுக்கர்பர்க் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் மனிதகுலத்தின் நலனுக்காக, நீங்கள் அளித்த வாக்குறுதிகளின்படி நடந்து கொள்ளுங்கள், ஏஐ வளர்ச்சியை தற்காலிகமாக நிறுத்துங்கள் என கூறியுள்ளார். மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாத இயந்திரங்களை உருவாக்குவதை முதலில் நிறுத்துங்கள் என தெரிவித்துள்ளார். மேலும், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால், தானும் தனது சக செனட்டர்களும் நேரடியாக சட்டரீதியான நடவடிக்கைகளில் இறங்குவோம் என சாண்டர்ஸ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஏஐ தொழில்நுட்பம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆபத்தானதாக மாறினால், அதன் வளர்ச்சியை நாங்களே தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அரசுக்கு வாக்குறுதி தந்திருப்பதை சாண்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தொழில்நுட்பங்கள் மீது மனிதகுலம் தனது கட்டுப்பாட்டை இழந்து வருவதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்திலும், உங்கள் நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து கொண்டு வேகமாக செயல்படுகின்றன, யாராலும் முழுமையாக புரிந்து கொள்ளவோ, கணிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாத ஒரு தொழில்நுட்பத்திற்கு பின்னால் உங்கள் ஓட்டம் உள்ளது என விமர்சித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஆபத்தான வைரஸ்கள் உருவாக்கப்படுவது, மெட்டா , ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் போன்ற நிறுவனங்களின் ஏஐ மாடல்கள் அண்மையில் நடந்த சோதனைகளில் தன்னிச்சையாக செயல்பட்டது, கூட்டு சதிகளில் ஈடுபட்டது ஆகியவற்றை சாண்டர்ஸ் தன் கடிதத்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, ஓபன்ஏஐ நிறுவனத்தின் மேம்பட்ட Astra AI மாடலின் வளர்ச்சியை, தீவிரமான இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தொழில்நுட்பங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி ஆபத்தான எல்லையை தொட்டுவிட்டதாக கூறும் அவர், சிஐஏ அமைப்பின் தலைவர் ஏஐ மாடல்களை டிஜிட்டல் அணு ஆயுதங்களுக்கு சமமானவை என கூறுவதாக தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஏஐ வளர்ச்சி அமெரிக்கர்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்திற்கான பிரச்சினை என குறிப்பிட்டுள்ள அவர், மனிதர்களை மிஞ்சும் எந்த ஒரு தொழில்நுட்பமும் பேராபத்து தான் என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் ஏஐ-க்கான டேட்டா செண்டர் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பெர்னி சாண்டர்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கார்டெஸ் ஆகியோர் ஏற்கனவே மார்ச் மாதம் மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் மிக நுண்ணறிவு கொண்ட சூப்பர் ஏஐ அமைப்புகளை உருவாக்க தடை விதிக்கவும், புதிய மத்திய ஒழுங்குமுறை அமைப்பு முழுமையாக செயல்படும் வரை மேம்பட்ட ஏஐ ஆய்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என புது மசோதாவை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை வழங்கும் வகையிலான சட்ட நடவடிக்கைகளும் இடம்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் அதேவேளையில், இது மனிதகுலத்திற்கு பேராபத்தாக முடியும் என்ற அச்சம் அமெரிக்க அரசியல் மற்றும் டெக் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா சட்டமாக மாறினால் மனிதர்களை மிஞ்சும் ஏஐ அமைப்புகளை உருவககும் நிறுவனங்களின் தலைவர்கள் 20 ஆண்டுகள் வரை சிறை செல்ல நேரிடலாம்.


Click it and Unblock the Notifications

