தவறு செய்பவர்கள் தங்கள் தவறை திருத்தி கொண்டு வாழும் மனநிலைக்கு வர வேண்டும் என்பதற்காக தான் குற்றங்களுக்கு குறிப்பிட்ட காலங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுகின்றன. கொலை, கொள்ளை, வழிப்பறி என ஒவ்வொரு தண்டனைக்கும் குறிப்பிட்ட காலம் சிறையில் அதாவது ஜெயிலில் இருக்க வேண்டி இருக்கும்.
ஜெயில் வாழ்க்கை என்பது அத்தனை எளிதானது அல்ல. தனிமை, குற்ற உணர்வு என பல விஷயங்கள் நிறைந்தது. இந்நிலையில் ஜெயில் எப்படி இருக்கும் அங்கே இருப்போரின் மனநிலை எப்படி இருக்கும்,அங்கே எந்த மாதிரியான அனுபவம் கிடைக்கும் போன்ற கேள்விகள் அனைவர் மனதிலுமே உண்டு. வழக்கமாக நாம் திரைப்படங்கள், நாடகங்களில் பார்ப்பதை போல உண்மையான ஜெயில் வாழ்க்கை இருக்குமா என்ற கேள்வி அனைவரிடமும் உண்டு.

இதற்கு நேரடியாக ஜெயிலுக்கு தான் செல்ல வேண்டும். குற்றம் செய்தால் தான் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்பதில்லை இங்கே குற்றம் செய்யாதவர்கள் கூட ஜெயிலுக்கு செல்கிறார்கள். குற்றவாளி அல்லாதவர்களும் சிறைவாசத்தை அனுபவிக்கும் வகையில், கட்டணத்துடன் கூடிய திட்டம் தெலுங்கானாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Feel the Jail எனப்படும் 'சிறைச்சாலையை அனுபவியுங்கள்' என்ற திட்டத்தை தெலங்கானா மாநில அரசு தொடங்கியுள்ளது. இதற்காக, ஹைதராபாத்தை அடுத்த சஞ்சல்குடா பகுதியில் மத்திய சிறைச்சாலை அருகிலேயே மாநில சீர்திருத்த நிர்வாக நிறுவனம் மாதிரி சிறைச்சாலை அறைகள் அடங்கிய அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளது.

இங்கு, பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொடங்கி தற்போது வரையிலான சிறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நிஜாம் காலத்து சிறை அமைப்புகளை சித்தரிக்கும் அறைகள், நாகார்ஜுன சாகர் அணை கட்டுமானத்துக்கு சிறைவாசிகள் ஆற்றிய பங்களிப்பு குறித்த கதைகள் ஆகியவை இங்கு இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமில்லாமல் மறுவாழ்வு திட்டங்கள், சிறை சார்ந்த தொழில்கள், தொழிற்பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.
மேலும் சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அனுபவிக்க விரும்புவோர் இங்கே உள்ள மாதிரி சிறைகளில் தங்கலாம். 12 அல்லது 24 மணி நேரம் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நபர், 12 மணி நேரம் சிறை வாழ்க்கையை அனுபவிக்க 1,000 ரூபாயும், 24 மணி நேரம் தங்க 2,000 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இடையில் வெளியே வர நினைத்தால் அபராத தொகையாக 500 ரூபாய் கட்ட வேண்டும் என அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வருவோருக்கு சிறை கைதிகளுக்கான சீருடை, உணவு ஆகியவை வழங்கப்படும். ஒரு சிறையில் 24 மணி நேரத்தில் என்ன எல்லாம் நடகுமோ அது அப்படியே இங்கேயும் நடக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் குறிப்பாக இன்ஸ்டாகிராம், ஷார்ட்ஸ் வீடியோக்களில் ஆர்வமுள்ள இளசுகள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இது பொதுமக்களுக்கு சிறைவாழ்க்கை அனுபவத்தை தருவதோடு அரசுக்கும் ஒரு வருவாயை ஏற்படுத்தி தருகிறது.


Click it and Unblock the Notifications

