இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளில் ஒன்று தான் Paytm.
நம்மூர் பால் பூத்திலிருந்து, மளிகை கடை அண்ணாச்சி, ரீசார்ஜ் என சகல வசதிகளையும் பேடிஎம் செய்து கொள்ளும் அளவுக்கு நம் மக்கள் பழகிவிட்டனர்.
இப்படியொரு மிகப்பெரிய இந்தியாவின் ஸ்டார்டப் நிறுவனமான பேடிஎம், கூகிள் ப்ளே ஸ்டோர் கொள்கை விதிகளை மீறுவதாக கூறி, கூகுள் நிறுவனம் பேடிஎம் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.
விரைவில் செயல்பாட்டுக்கு வரும்
எனினும் இந்த பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனையில் அதிகளவில் பயன்படுத்தப்படும் பேடிஎம், விரைவில் கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் கொண்டு வரப்படும் எனவும் பேடிஎம் தெரிவித்துள்ளது. அதோடு அதன் வாடிக்கையாளர்களின் பணம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. ஆக யாரும் பயப்பட வேண்டாம் எனவும் பேடிஎம் தெரிவித்துள்ளது.
மீண்டும் பயன்படுத்தலாம்
மேலும் வாடிக்கையாளர்கள் அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. பேடிஎம் நிறுவனம் கட்டுப்பாடற்ற சூதாட்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், விளையாட்டு பந்தயம் தொடர்பான சேவை என கூகுளின் கொள்கைகளை மீறியதால், ப்ளே ஸ்டோரில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற பயன்பாடுகள் செயல்பாட்டில் உள்ளன
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் நீக்கப்பட்டிருந்தாலும், அதன் மற்ற பயன்பாடுகளான பேடிஎம் மணி (Paytm money), பேடிஎம் மால் (Paytm Mall), இன்னும் சில இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆஃப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளன. எனினும் தற்போதைக்கு பேடிஎம் ஆஃப்பினை மட்டும் புதியதாக டவுன்லோடு செய்யவோ அல்லது அப்டேட் செய்யவோ முடியாது.
இது விதி மீறல்
இது குறித்து கூகுள் நிறுவனம் நாங்கள் ஆன்லைன் சூதாட்ட பயன்பாடுகளை அனுமதிக்க மாட்டோம். அதோடு விளையாட்டு பந்தயங்களை எளிதாக்கும், எந்தவொரு கட்டுபாடற்ற சூதாட்ட ஆஃப்களையும் ஆதரிக்க மாட்டோம். ஆக ஒரு ஆஃப் வெளிப்புற தளத்திற்கு, கட்டண போட்டிகளில் பங்கேற்க அணுமதிப்பது விதி மீறலாகும். அது எங்கள் கொள்கைகளை மீறுவதாகும் எனத் தெரிவித்துள்ளது. அதோடு ஆஃப் டெவலப்பர் இதனை சரி செய்யும் வரை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளது.