பேடிஎம், ஈடெக்ஏசஸ் என இந்தியாவின் 6 முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை வெளிநாட்டில் பட்டியலிடத் தயாராகியுள்ள நிலையில், கார்ப்ரேட் அமைச்சகம் மற்றும் வருவாய் துறையில் விரிவான வழிகாட்டுதல்களுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாகப் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கைக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும், புதிய நிறுவனங்களைத் துவங்க ஊக்குவிக்கவும் மத்திய அரசு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இண்டர்நெட் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதற்காகவும், புதிய வர்த்தக முறைகளையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் காரணத்தால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்தப் பட்ஜெட் அறிக்கை மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
வெளிநாட்டுப் பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிடத் தயாராகும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏற்கனவே அதற்கான தகுதிகளையும், விதிமுறைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தப் பட்ஜெட் அறிவிப்பில் எந்த நாட்டில் பட்டியலிடலாம், வரி விதிப்புகள் குறித்த அரசின் விதிமுறைகளுக்காகக் காத்திருக்கிறது இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.
ஈடெக்ஏசஸ் நிறுவனம்
ஈடெக்ஏசஸ் மார்கெட்டிங் மற்றும் கண்சல்டிங் நிறுவனம் வெளிநாட்டுப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான அனைத்து சட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் வருகிற அக்டோபர் மாதம் வெளிநாட்டுப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1.5 பில்லியன் டாலர் மதிப்பீடு
ஜூலை 2020 இந்நிறுவனத்தின் பங்கு விற்பனையில் துபாய் முதலீட்டு நிறுவனம் பங்குபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாப்ட்பேங்க் 130 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளைக் கூடுதலாகக் கைப்பற்றியது. இந்த முதலீட்டுச் சுற்றின் மூலம் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பேடிஎம்-இன் மாபெரும் திட்டம்
இந்தியாவில் டிஜிட்டல் நிதியியல் மற்றும் பேமெண்ட் சேவையில் வேமாக வளர்ந்து வரும் பேடிஎம் நிறுவனம் வெளிநாட் டு சந்தையில் பட்டியலிட முடிவு செய்துள்ள நிலையில் எந்த நாட்டில், எப்போது பட்டியலிடப் போகிறது என்பதை முடிவு செய்யாத நிலையில் அரசின் அறிவிப்புகளைக் கூர்ந்து கவனித்து வருகிறது. பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பு 16 பில்லியன் டாலராக உயர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனமாக உயர்ந்துள்ளது.
முக்கிய இந்திய ஸ்டார்அப்
பேடிஎம், ஈடெக்ஏசஸ் மார்கெட்டிங் மற்றும் கண்சல்டிங் நிறுவனத்தைத் தொடர்ந்து சோமேட்டோ, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான டெல்ஹிவரி, அழகு சாதன பொருட்கள் நிறுவனமான நைகா, ஆகிய நிறுவனங்களும் வெளிநாட்டில் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் உட்பட 6 முதல் 8 நாடுகளில் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களைப் பட்டியலிடும் போது இந்நிறுவனங்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரைவில் வெளியேற ஏதுவாக இருக்கும் என்றும் இதனால் நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் தன் கையில் அதிகரிக்கும் என இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நம்புகிறது.