கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வொர்க் ப்ரம் ஹோம் என்ற நிலை பல ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் நிலையை முடிவுக்கு கொண்டுவந்து அலுவலகத்திற்கு வந்து பணி செய்யுமாறு அறிவித்து வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் சில நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்பது நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு வசதியாக இருப்பதால் தொடர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பேடிஎம் நிறுவனம்
இந்த நிலையில் இந்தியாவில் பண பரிவர்த்தனை செய்யும் செயலிகளில் ஒன்றான பேடிஎம் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களுக்கு நிரந்தரமாக ஒரு வொர்க் ப்ரம் ஹோம் வசதியை வழங்க முடிவு செய்துள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம்
இதுகுறித்து பேடிஎம் சிஇஓ விஜய் ஷர்மா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு அனிமேஷன் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அனிமேஷன் வீடியோ
அந்த வீடியோவில் அலுவலகம் சென்று வேலை செய்ய வேண்டிய நபர் காலை 6 மணிக்கே எழுந்து, அவசர அவசரமாக அலுவலகம் செல்ல தயாராகி, பேருந்து நெரிசலில் சிக்கி சோர்வுடன் அலுவலகத்தில் சென்று பணி செய்கிறார். அதேநேரத்தில் வொர்க் ப்ரம் ஹோம் பணி செய்யும் நபர் காலை 8 மணி வரை தூங்கி அதன்பின் சாவகாசமாக எழுந்து நிம்மதியாக தனது பணியைத் தொடங்குகிறார். இந்த வீடியோ மூலம் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்பவர்களை விட வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு அதிக வசதி உள்ளது என்பதை அவர் அறிவித்துள்ளார்.
பேடிஎம் சி.இ.ஓ
இந்த நிலையில் பேடிஎம் நிறுவனத்தில் பணிபுரியும் தொழில்நுட்பம் மற்றும் வணிக பிரிவில் உள்ளவர்கள் மட்டும் வீட்டில் இருந்து அல்லது அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் இருந்து பணி செய்ய அனுமதி தரப்படுவதாக பேடிஎம் சிஇஓ விஜய் ஷர்மா அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் வணிக பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள்
கூகுள், டெஸ்லா உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்கள் கண்டிப்பாக அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில் பேடிஎம் சிஇஓ விஜய் ஷர்மாவின் இந்த முடிவு பெரும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலுவலகத்தில் வேலை
ஆப்பிள் முதல் அனைத்து நிறுவனங்களும் தற்போது ஊழியர்களை அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அலுவலகத்துக்கு வந்து தான் வேலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா எலான் மஸ்க்
குறிப்பாக டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் அவர்கள் ஊழியர்களை இனியும் வீட்டிலிருந்து வேலை செய்வதை அனுமதிக்க முடியாது என்றும் குறைந்தபட்சம் வாரம் 40 மணி நேரம் அலுவலகத்தில் வந்து பணி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஊழியர்கள் பலர் அதிர்ச்சி அடைந்து ராஜினாமா செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.


Click it and Unblock the Notifications