இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட்ட பேடிஎம் நிறுவனம் 2,150 ரூபாய் என்ற மிகப்பெரிய விலையில் 18,300 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட முடிவு செய்தது.
இந்திய சந்தையில் சோமேட்டோ, நைகா நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்பு அதிகளவிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடக் குதித்தது, முதலீட்டாளர்களும் ஆர்வமாகவே இருந்தனர். ஆனால் பேடிஎம் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு முதல் நாளிலேயே அதிகப்படியான நஷ்டத்தைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா மும்பை பங்குச்சந்தையில் பேசியுள்ளார்.
விஜய் சேகர் சர்மா கண்ணீர்
பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா இன்று மும்பை பங்குச்சந்தையில் நிறுவனம் பட்டியலிடப்பட்டதற்கான நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடலை கேட்ட உடனே கண்ணீர் விட்டு தனது பேச்சை துவங்கினார்.
பேடிஎம் நிறுவனம்
அவர் பேசுகையில் 'Bharat Bhagya Vidhata' என்ற சொற்களுக்குப் பொருள் இந்திய நாட்டின் வளத்தை உருவாக்குபவர் எனப் பொருள், உண்மையில் பேடிஎம் நிறுவனத்தின் ஒவ்வொரு ஊழியரும் இதைச் செய்து காட்டியுள்ளனர் எனப் பேசினார்.
பேடிஎம் நம்பிக்கை
மேலும் அவர் பேசுகையில் பேடிஎம் இன்றைய நிலையை, எந்த ஒரு காலமும் அடைய முடியாது எனக் கூறியவர்களுக்குப் பதில் அளித்துள்ளோம். பல ஆயிரம் இந்தியர்களுக்குப் பேடிஎம் நம்பிக்கை அளித்துள்ளது, பெரும் நிறுவனங்கள் அரசு நிறுவனங்கள் மட்டும் பெரிய ஐபிஓ-வை வெளியிட முடியும் என்பதையும் பேடிஎம் உடைத்துள்ளது.
புதிய சரித்திரம்
பேடிஎம் நிறுவனத்தைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் இந்தியாவில் புதிய சரித்திரத்தைப் படைக்கக் காத்திருக்கிறது. இதுபோன்ற வெற்றிக் கதைகள் தொடர்ந்து இனி வெளியாகிக் கொண்டே இருக்கும் எனவும் பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார். மேலும் பேடிஎம் பல நிறுவனங்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் என நம்புகிறோம் எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.
முதலீடு திரட்டல்
மேலும் பலர் என்னிடம் இவ்வளவு பெரிய பங்கு விலையில் எப்படி முதலீடு திரட்ட முடிகிறது எனக் கேட்கிறார்கள், நான் அவர்களிடம் சொல்வது விலையை வைத்துப் பணத்தைத் திரட்டுவது இல்லை, தேவையை வைத்து தான் பணத்தைத் திரட்டுகிறேன் எனக் கூறினார்.
ஓன் 97 கம்யூனிகேஷன்ஸ்
பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஐபிஓவில் 2,150 ரூபாய்க்கு பங்குகளை வெளியிட்ட நிலையில், இன்று காலை பட்டியலிடும் போது 9 சதவீத டிஸ்கவுன்ட் விலையில் அதாவது 9 சதவீதம் குறைவான விலையில் பட்டியலிடப்பட்டது.
பேடிஎம் பங்கு நிலைமை
இன்றைய வர்த்தக முடிவில் ஓன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் தனது ஐபிஓ விலையில் இருந்து 27.25 சதவீதம் சரிந்து 1564.15 ரூபாய்க்கும், பட்டியலிடப்பட்ட விலையில் இருந்து 19.99 சதவீதம் சரிந்துள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சரிந்துள்ளது.
இளம் முதலீட்டாளர்கள் அதீத ஆர்வத்துடன் பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்து வந்த நிலையில் பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications