இந்தியாவில் யுபிஐ செயலிகள் பயன்பாட்டில் முன்னிலையில் இருக்கிறது பேடிஎம். ஏராளமான மக்களிடமும் சிறு வணிகர்களிடமும் யுபிஐ செயலி பயன்பாட்டை கொண்டு சேர்த்த பெருமை பேடிஎம் நிறுவனத்திற்கு உண்டு. பேடிஎம் சவுண்ட் பாக்ஸ் இல்லாத கடைகளே இல்லை என்ற அளவிற்கு நாட்டின் மூலை முடுக்கெங்கும் யுபிஐ சேவைகளை கொண்டு சேர்த்திருக்கிறது.
பேடிஎம் நிறுவனத்தை பொருத்தவரை யுபிஐ பயன்பாடுகளில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மிக முக்கியமான ஒரு வசதியை பேடிஎம் நிறுவனம் கொண்டு வந்திருக்கிறது. இதன்படி என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுடைய இன்டர்நேஷனல் மொபைல் நம்பரை பேடிஎம் செயலியோடு இணைத்து இந்தியாவில் யுபிஐ பேமென்ட்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய ஃபின் டெக் நிறுவனமான பேடிஎம் இதற்காக தங்களுடைய செயலியில் புதிய வசதியை கொண்டு வந்திருக்கிறது. எனவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி தங்களுடைய இன்டர்நேஷனல் மொபைல் நம்பர்களை பயன்படுத்தி இந்தியாவில் யுபிஐ பேமென்ட்களை மேற்கொள்ள முடியும். தற்போதைக்கு இது பீட்டா சோதனையில் இருப்பதாகவும் , விரைவில் இது அனைத்து பயனாளர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தங்களுடைய சர்வதேச மொபைல் எண்களை தங்களுடைய NRE அல்லது NRO கணக்குகளோடு இணைத்து கொள்ளலாம். இதனை அடுத்து வழக்கம் போல யுபிஐ பேமென்ட்களை மேற்கொள்ளலாம். இந்தியாவின் இவர்கள் யுபிஐ பயன்படுத்துவதற்கு இந்திய சிம் கார்டு தான் தேவை என்ற அவசியம் இனி கிடையாது .
12 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்த சேவை முதல் கட்டமாக கிடைக்கும் என பேடிஎம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது .சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ,கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார் ,அமெரிக்கா, சவூதி அரேபியா ,ஐக்கிய அரபு அமீரகம் ,பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் மலேசியா ஆகிய 12 நாடுகளில் வசிக்கக்கூடிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் தற்போதைக்கு முதல் கட்டமாக இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் இண்டர்நேஷ்னல் மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்ட யுபிஐ கணக்கினை பயன்படுத்தி இந்திய வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பலாம், இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய செயலிகள் அல்லது ஆன்லைன் தளங்களில் ஷாப்பிங் செய்து ஆன்லைனில் பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மிகச் சிறந்த ஒரு பாதுகாப்பான நிதி பரிவர்த்தனை வசதியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் உங்களுடைய போனில் பேடிஎம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் உங்களுடைய இன்டர்நேஷனல் மொபைல் நம்பரை கொண்டு லாகின் செய்து கொள்ள வேண்டும் . இதனை அடுத்து உங்களுடைய போன் நம்பருக்கு வரக்கூடிய எஸ்எம்எஸ்-ஐ கொண்டு உங்களுடைய இணைப்பை கன்ஃபார்ம் செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களின் NRE அல்லது NRO வங்கி கணக்கை இணைத்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications