உலகமே விரல் நுனியில் வந்து விட்டது. ஒரு விஷயத்தைப் பற்றிப் பார்க்கவோ படிக்கவோ வேண்டும் என்றால் ஒரு சொடக்கில் எல்லா விவரங்களையும் படித்துவிடலாம்.
அதே போலத் தான் ஒருவருக்கு ஒரு செய்தி சொல்ல வேண்டும் என்றாலோ, பணம் அனுப்ப வேண்டும் என்றாலோ கூட அந்த ஒரு நொடி போதும்.
இப்படி எல்லாமே இணையத்தில் இருக்கும் போது, திருட்டுத்தனமும் இணையத்தில் தான் பலமாக நடந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடமே ஆன்லைனில் பணத்தை அடித்துவிட்டார்கள் என்றால் இணைய திருடர்களின் திறமையைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
திருட்டுக்கள்
கடந்த சில வருடங்களாக, பேடிஎம், ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பறிப்பதை இணைய திருடர்கள் ஒரு டிரெண்டாகவே வைத்திருக்கிறார்கள். கஸ்டமர் கேர் அதிகாரிகள் போல பேசி ஏமாற்றுவது, ரீ-ஃபண்ட் தருவதாகச் சொல்லி ஏமாற்றுவது... என தொடர்ந்து பல வழிகளில் திருட்டுக்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.
பேடிஎம் நடவடிக்கை
இந்த திருட்டுத் தனங்களைக் குறைக்க, 3,500 செல்ஃபோன் எண்களை நொய்டா சைபர் போலீசாரிடம் கொடுத்து இருக்கிறது பேடிஎம் நிறுவனம். அந்த 3,500 செல்ஃபோன் எண்களையும் தன் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்து இருக்கிறார்களாம். இந்த செல்ஃபோன் எண்களால் தான் ஆன்லைன் திருட்டுக்கள் நடைபெறுவதாக பேடிஎம் நிறுவனம் நம்புகிறார்களாம்.
ஷார்ட் கோட்
இந்த 3,500 செல் போன் எண்களைத் தவிர, பல ஷார்ட் கோட்களையும் அதிகாரிகளிடம் கொடுத்து இருக்கிறார்களாம். இந்த எஸ் எம் எஸ் ஷார்ட் கோட்கள் தான் யாரிடம் இருந்து எஸ் எம் எஸ் வருகிறது என்பதைக் காட்டும் உதாரணமாக Paytm-ல் இருந்து வரும் எஸ் எம் எஸ்கள் paytm என்றே இருக்கும்.
போலி ஷார்ட் கோட்
போலிகளிடம் இருந்து வருபவைகள்PYtm என்று இருக்கும். இந்த paytm, pytm என்பது தான் ஷார்ட் கோட்கள். இந்த ஷார்ட் கோட்கள் உண்மையாகவே பேடிஎம் நிறுவனத்தில் இருந்து வருவதாக நம்பி பல வாடிக்கையாளர்கள் ஏமாந்துவிடுகிறார்கள். எனவே டெலிகாம் கம்பெனிகள் இந்த ஷார்ட் கோட்களை வழங்கும் போது கவனமாக வழங்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்களாம்.
தரவுப் பகிர்வு
கடந்த அக்டோபர் 2019-ல் ஏழு இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, தங்களிடம் இருக்கும் தரவுகளை மத்திய ரிசர்வ் வங்கியிடமும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடமும் பகிர்ந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற தரவு பகிர்வுகளால் ஆன்லைன் திருட்டுக்களை எதிர்த்துப் போராட உதவும் எனச் சொல்கிறார்கள்.
அனுமதி
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களே, நேரடியாக, டிராய் அமைப்பிடம் சொல்லி ஆன்லைன் திருட்டுக்களில் ஈடுபடும் செல்ஃபோன் எண்கள் மற்றும் ஷார்ட் கோட்களை பிளாக் செய்ய பரிந்துரைக்கும் உரிமையைக் கொடுக்கச் சொல்லி, இந்திய டெலிகாம் சந்தையை நிர்வகிக்கும் டிராய் அமைப்பிடம் கோரிக்கை வைத்து இருக்கிறது பேடிஎம் நிறுவனம்.