இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்கள் பேடிஎம் நிறுவனத்தால் லாபம் பார்த்தார்களா என்பதை காட்டிலும், தொடர்ந்து இழப்பினை கண்டார்கள் என்பதே உண்மை.
தொடர்ச்சியாக பல காலாண்டுகளாக நஷ்டத்தினை மட்டுமே கண்டு வரும் பேடிஎம் நிறுவனம், தொடர்ந்து சரிவினை மட்டுமே கண்டு வருகின்றது.
பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் கடந்த நவம்பர் மாதம் தனது பங்கு வெளியீட்டினை செய்தது. இந்த பங்கு வெளியீட்டில் 2080 - 2150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இன்றைய பங்கு விலை நிலவரம்?
என்.எஸ்.இ-யில் பேடிஎம் பங்கின் விலையானது இன்று 1.04% அதிகரித்து, 638.55 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 654.90 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 634.15 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 1.00% அதிகரித்து, 638.60 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 654 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 634.55 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1961.05 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 511 ரூபாயாகவும் உள்ளது.
டெக்னிக்கலாக என்ன நிலவரம்?
இந்த பங்கு விலையானது இன்று வரையில் வெளியீட்டு விலைக்கு மேலாக செல்லவில்லை எனலாம்,. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டமே என்றும் கூறலாம். தற்போது வரையிலும் கூட இந்த பங்கின் விலைய்யானது 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்-ஜூக்கு கீழாக வர்த்தகமாகி வருகின்றது.
பங்கு வரலாறு
இப்பங்கின் விலையானது நடப்பு ஆண்டில் இதுவரையில் 52.17% சரிவினைக் கண்டுள்ளது. இதே கடந்த 3 மாதங்களில் 18.87% சரிவினையும், 1 மாதத்தில் 6.27% சரிவினையும் கண்டுள்ளது.
இதற்கிடையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் ஷர்மா, நிறுவனம் முதலீட்டாளார்களுக்கு லாபகரமானதாகவும், போதிய பணப்புழக்கத்திற்கான இருப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உற்சாகமாக உள்ளேன்
அதுமட்டும் அல்லது நிறுவனம் அளவிடக்கூடிய லாபகரமான நிதிச் சேவையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளதாகவும் ஷர்மா தெரிவித்துள்ளார். எங்களது சமீபத்திய காலாண்டுகளாக தொடர்ந்து வலுவான செயல்பாட்டு லீவரேஜ் மற்றும் எபிட்டா இழப்புகளை கண்டது. தற்போது லாபகரமான நிறுவனமாக மாறும் அளவுக்கு நெருங்கியுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு எங்கள் பயணம் நேர்மறையாக இருக்கும். இது குறித்து நான் உற்சாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
நஷ்டம் குறைவு
பேடிஎம் நிறுவனம் கடந்த வாரம் தனது இரண்டாவது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. இதன் மூலம் அதன் ஒருங்கிணைந்த நிகர நஷ்டம் 571 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது ஜூன் காலாண்டிலும் 644.4 கோடி ரூபாயாக நஷ்டம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நஷ்டம் குறைந்துள்ள அதே வேளையில் நிறுவனத்தின் வருவாய் விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் 76% அதிகரித்து, 1914 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1086 கோடி ரூபாயாக இருந்தது.
அதிகரிக்கும் நம்பிக்கை
கடன் சந்தையில் நல்ல வளர்ச்சி இருப்பதாகவும், இதன் எதிர்காலம் குறித்தும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டில் தேவை அதிகம் உள்ள நிலையில் அதன் எதிர்கால வளர்ச்சி என்பது மேம்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நிறுவனம் தற்போது நஷ்டத்தினை கண்டிருந்தாலும், தொடர்ந்து குறைந்து வரும் நஷ்டம் என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கவனம் இதில் தான்
இது அதன் செயல்திறனை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது. இதனால் அதன் லாபம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையானது முதலீட்டாளர்கள் மத்தியில் வந்துள்ளதாகவும், அதற்கேற்ப நிறுவனம் தொடர்ந்து அதன் செயல்பாடுகளை மேம்படுத்தி வருவதாகவும் ஷர்மா தெரிவித்துள்ளார்.