இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம், ஐபிஓ வாயிலாகத் தனது நிறுவனத்தை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அடுத்த ஒரு வருடத்தில் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பட்டியலிடக் காத்துக்கொண்டு இருக்கிறது.
குறிப்பாகச் சோமேட்டோ, பாலிசிபஜார், ஸ்விக்கி, பேடிஎம் எனச் சிறிதும் பெரிதுமாகப் பல முன்னணி ஸ்டார்ட்ப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது.
பேடிஎம் ஐபிஓ
பொதுவாக ஐபிஓ என்றால் அதிக லாபம் எனக் கண்ணோட்டம் உள்ளது, அதிலும் குறிப்பாக முன்னணி நிறுவனங்கள், அதிக வர்த்தகம் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். முதலீட்டாளர்கள் முந்தியடித்துக்கொண்டு முதலீடு செய்ய வருவார்கள்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இந்நிலையில் இந்தியாவில் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், வர்த்தக விரிவாக்கத்திற்குத் தேவையான முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதற்காகவும் பங்குச்சந்தையில் தங்களது நிறுவனத்தை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
3 பில்லியன் டாலர் முதலீடு
இதன் படி தற்போது பேடிஎம் ஐபிஓ மூலம் இந்திய முதலீட்டாளர்கள் மூலம் சுமார் 3 பில்லியன் டாலர் அதாவது 21,8000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்திய ஐபிஓ வரலாறு
இதுவரை இந்திய ஐபிஓ வரலாற்றில் பேடிஎம் நிறுவனத்தின் ஐபிஓ தான் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருக்கும். இதுவரை எந்த ஒரு நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் 3 பில்லியன் டாலர் அளவில் முதலீட்டை ஈர்த்துள்ளது இல்லை. 2010ல் கோல் இந்தியா சுமார் 15,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை அதிகப்படியாக ஐபிஓ வாயிலாக ஈட்டியது.
முதலீட்டாளர்களுக்கு வேட்டை
பெரும் தொகை என்பதால் நிறுவன முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் ரீடைல் முதலீட்டாளர்களுக்கும் அதிகளவிலான முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஒப்பிடுகையில் இந்திய பங்குச்சந்தையில் டெக் நிறுவனங்களின் எண்ணிக்கை சற்றுக் குறைவு என்பதால் புதிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
ஜப்பான் சாப்ட்பேங்க், சீனாவின் அலிபாபா
ஜப்பான் சாப்ட்பேங்க் மற்றும் சீனாவின் அலிபாபா நிறுவனங்களின் முதலீட்டு ஆதிக்கத்தில் இயங்கும் பேடிஎம் தற்போது 16 பில்லியன் டாலர் அளவிற்கு மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஐபிஓ மூலம் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பு 25 முதல் 30 பில்லியன் டாலர் வபையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஇஓ விஜய் சேகர் சர்மா
பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் கட்டுப்பாட்டில் தான் பேடிஎம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா தலைமையில் பேடிஎம் தற்போது போன்பே, கூகிள் பே, அமேசான் பே, வாட்ஸ்அப் பே எனப் பல முன்னணி நிறுவனங்கள் உடன் போட்டிப்போட்டு வருகிறது.