ஒன்97 கம்யூனிகேஷன்ஸின் டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான பேடிஎம், 2021-2022 நிதியாண்டில் 2,396.4 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2020-2021 நிதியாண்டில் இதுவே 1,701 கோடி ரூபாயாக இருந்தது. ஒரு வருடத்தில் 41 சதவீதம் கூடுதலாக பேடிஎம் நட்டம் அடைந்துள்ளது.
வருமானம்
2020-2021 நிதியாண்டில் 3,186.8 கோடியாக இருந்த பேடிஎம் நிறுவனத்தின் வருவாய், 2021-2022 நிதியாண்டில் 5,264.3 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
செலவு அதிகரிப்பு
சென்ற ஒரு ஆண்டில் பேடிஎம் நிறுவனம் 7,601.1 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு செய்த 4,783 கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது 59 சதவீதம் செலவு அதிகரித்துள்ளது.
ஐபிஓ
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிட்ட பேடிஎம், அப்போடு ஒரு பங்கி விலையை 2,150 ரூபாய்க்கு விற்றது. அது இப்பொது 73 சதவீதம் சரிந்து வெள்ளிக்கிழமை சந்தை நேர முடிவில் 575.35 ரூபாயாக உள்ளது.
கடன் வழங்கல் சேவை
2021-2022 நிதியாண்டில் பேடிஎம் நிறுவனம் 7,623 கோடி ரூபாய் கடன் விநியோகித்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் நிதி நிலைமை இப்படியே தொடர்ந்தால் வரும் காலத்தில் பங்குகளின் விலை 100 ரூபாய்க்கும் குறைவாக சென்றாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என கூறுகின்றனர்.
முக்கிய முதலீட்டாளர்கள்
பேடிஎம் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்கள் அலிபாபா மற்றும் ஆண்ட் குழுமம் இரண்டும் இந்த வாரம் வெளியேறுவதாக அறிவித்தனர். இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் பல கோடிகள் அளிக்க வேண்டிய நிலைக்கு பேடிஎம் தள்ளப்பட்டுள்ளது. பேடிஎம் நிறுவனம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ஒரு முறை கூட லாபம் என்பதை பார்த்ததே இல்லை.
ஐபிஓ, பங்குச்சந்தை மூலம் சில்லறை முதலீட்டாளர்கள் பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிலையில் பெரும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறுவது அதிகரித்துள்ளது.