பேடிஎம் நிறுவனத்தின் முக்கியக் கிளை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்கள் மற்றும் இதர தரவுகளைத் தனது சீன முதலீட்டு நிறுவனத்திற்குப் பகிர்ந்தது தொடர்பாக ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது.
இதன் எதிரொலியாக ஐபிஓ வெளியிட்ட நாளில் இருந்து சரிந்து வரும் பேடிஎம் பங்குகள் கடந்த 3 நாட்களில் அதிகப்படியான சரிவைப் பதிவு செய்து. இதன் மூலம் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் சர்மா மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டு உள்ளார்.
பேடிஎம்
இந்தியாவின் முன்னணி பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் மாபெரும் திட்டத்துடன் 18,300 கோடி ரூபாய் என்ற இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை 2150 ரூபாய் பங்கு விலையில் வெளியிட்டது. ஆனால் முதல் நாளே தள்ளுபடி விலையில் பட்டியலிட்ட பேடிஎம் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.
ஐபிஓ தோல்வி
நவம்பர் 18ஆம் தேதி ஐபிஓ வெளியிட்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் பேடிஎம் பங்குகள் அதிகப்படியாக 1961.05 ரூபாய் அளவீட்டைப் பதிவு செய்தது. நேற்றைய வர்த்தகத்தில் பேடிஎம் பங்குகள் 572.25 ரூபாய் என்ற மிகவும் மோசமான நிலையை அடைந்தது.
பில்லியனர்கள் பட்டியல்
இந்த மாபெரும் சரிவின் மூலம் பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்று இருந்த விஜய் சேகர் சர்மா நேற்று மாலை வர்த்தக முடிவில் வெளியேற்றப்பட்டார். அதாவது பேடிஎம் பங்குகளின் விலை குறைந்த காரணத்தால் விஜய் சேகர் சர்மா-வின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலருக்குக் கீழ் சரிந்தது.
பேடிஎம் பங்கு விலை
புதன்கிழமை வர்த்தகத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்கு விலை சரிவைப் பயன்படுத்திக் கூடுதலான முதலீட்டைச் செய்த காரணத்தால் இன்றைய வர்த்தகத்தில் பேடிஎம் பங்குகள் 6.81 சதவீதம் வரையில் உயர்ந்து 632.75 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விஜய் சேகர் சர்மா சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலராக உயர்ந்து மீண்டும் பில்லியனர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளார்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இந்தியாவில் ஐபிஓ வெளியிட்ட பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் அதிகப்படியான நஷ்டத்தைக் கொடுத்தது பேடிஎம் தான். பேடிஎம் இதுவரையில் சுமார் 80000 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை விழுங்கியுள்ளது.
பேடிஎம் தோல்விக்குப் பின் ஐபிஓ வெளியிட திட்டமிட்ட பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.