இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் துறையின் வளர்ச்சிக்கு எந்த அளவிற்குப் பணமதிப்பிழப்பு உதவியதோ, அதேபோல் பேடிஎம் செயலியும் அனைத்து மட்டத்திலும் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளைப் பயன்படுத்தும் தளத்தை உருவாக்கி பெரிய அளவில் உதவியது.
பொதுவாக டிஜிட்டல் பேமெண்ட் துறையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் பேமெண்ட் மற்றும் பில்-களைச் செலுத்துவதற்கு எவ்விதமான கட்டணமும் செலுத்துவது இல்லை, ஆனால் பேடிஎம் தற்போது பல சேவைகளுக்குக் கட்டணத்தை வசூலிக்கத் துவங்கியுள்ளது.
இதனால் இலவச டிஜிட்டல் பேமெண்ட் சேவை என்ற நிலை இந்தியாவில் மாற உள்ளது.
பேடிஎம்
இந்திய மக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பேடிஎம் நிறுவனமும், அதன் சேவைகளும் மிகவும் பிரபலம். பெட்டி கடை முதல் பேக்கரி, தள்ளுவண்டி கடை முதல் அனைத்து வர்த்தக இடங்களிலும் பேடிஎம் சேவைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பேடிஎம் ஸ்பீக்கர்
பேடிஎம் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த பேடிஎம் ஸ்பீக்கர் டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் முக்கியமான அறிவிப்புத் தற்போது வெளியாகியுள்ளது.
கட்டணம்
புக்மைஷோ போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு பணப் பரிமாறத்திற்கும் convenience fee வாங்குவது வழக்கம், ஆனால் பேடிஎம் இதுபோன்று வசூலிப்பது இல்லை. சில வருடங்களுக்கு முன்பு பேமெண்ட் நிறுவனங்கள் விரைவில் ஒவ்வொரு பேமெண்ட்-க்கும் கட்டணத்தை வசூலிக்கும் எனக் கருத்து நிலவியது.
உத்தரவாதத்தை உடைத்தது பேடிஎம்
இதை உடைக்கும் வண்ணம் பேடிஎம் ஜூலை 1, 2019ல் கார்டுகள், யுபிஐ மற்றும் வாலட் ஆகியவற்றை உள்ளடக்கிய எந்தவொரு கட்டண முறையைப் பயன்படுத்தினாலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணம் அல்லது பரிவர்த்தனை கட்டணத்தையும் Paytm வசூலிக்காது என அறிவித்தது.
convenience கட்டணம்
ஆனால் இப்போது 100 ரூபாக்கு அதிகமான மொபைல் ரீசார்ஜ், கரெண்ட் பில், கேஸ் பில், தண்ணீர் பில் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 1 முதல் 6 ரூபாயை வரையில் convenience fee வாங்க துவங்கியுள்ளது பேடிஎம்.
சில வாடிக்கையாளர்கள் மட்டுமே
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அனைத்துப் பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கும் இந்தக் கட்டணத்தை வசூலிப்பது இல்லை, சில கட்டணங்களுக்குச் சில வாடிக்கையாளர்கள் மட்டுமே பேடிஎம் convenience fee வசூலித்து வருகிறது. விரைவில் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
பணம் பணம்..
இதுக்குறித்துப் பேடிஎம் கூறுகையில் தனது நிறுவனத்தின் சேவைகளுக்கு நாமினல் கட்டணம் வசூலிக்கத் துவங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் பேமெண்ட் சேவை துறையில் அதிகாரப்பூர்வமாக இலவச சேவைகளுக்கு மூடிவிழா துவங்கியுள்ளது. அடுத்தச் சில வருடத்தில் சாதாரண டிஜிட்டல் பேமெண்ட்-க்கும் கட்டணம் வர வாய்ப்பு உள்ளது.