பேடிஎம் நிறுவனத்திலிருந்து அதன் முக்கிய முதலீட்டளர்களான ஆலிபாபா மற்றும் ஆன்ட் பைனான்சியல் நிறுவனங்கள் வெளியேறியதால், நிறுவனத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 99.5 சதவீதம் சரிந்துள்ளது.
ஆலிபாபா மற்றும் ஆன்ட் பைனான்சியல் நிறுவனங்கள் வெளியேறியதை பேடிஎம் மால் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
ஆலிபாபா மற்றும் ஆன்ட் பைனான்சியல்
பேடிஎம் நிறுவனத்தின் இரண்டு முக்கிய முதலீட்டாளர்கள் வெளியேறி இருந்தாலும் அதன் மதிப்பு எவ்வளவு என்ற விவரங்கள் வெளியாகவில்லை. அலிபாபா நிறுவனத்திடம் 28.3 சதவீத பங்குகளும், ஆண்ட் பைனான்சியலிடம் 15 சதவீத பங்குகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பரிவர்த்தனை மதிப்பு
மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு ஒரு பங்குக்கு 459 ரூபாய் என 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இந்த பரிவர்த்தனையின் மதிப்பு இருக்கும் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
ஹாரூன் யூனிகார்ன் பட்டியல்
2020-ம் ஆண்டு பேடிஎம் நிறுவன மதிப்பு 3 பில்லியன் டாலர் என அறிவிக்கப்பட்டது. அதுவே 2022 ஹாரூன் யூனிகார்ன் பட்டியலில் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் டாலருக்கு குறைவாகச் சரிந்து, யூனிகார்ன் மதிப்பையும் இழந்துள்ளது என தெரிவித்திருந்தது.
பேடிஎம் மால் மூலம் ஆஃப்லைன் - ஆன்லைன் வர்த்தகத்தில் பேடிஎம் கவனம் செலுத்தி வந்தது. ஆனால் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் பேடிஎம் மாலுக்கு பெரும் போட்டியாக உள்ளன.
ONDC
எனவே இந்தியாவின் ஓபன் நெட்வொர்க் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) மூலமாக ஈ-காமர்ஸ் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக பேடிஎம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தைச் செயல்படுத்த இந்திய அரசாங்கத்தின் புரட்சிகரமான ONDC திட்டத்தை நாங்கள் உருவாக்க உள்ளோம். ஏற்றுமதி சந்தையில் உள்ள வாய்ப்புகளை ஆராயவும் திட்டமிட்டுள்ளோம். எங்கள் முதலீட்டாளர்களின் ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நிலையான வளர்ச்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம் என பேடிஎம் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்
இன்றைய சந்தை நேர முடிவில் பேடிஎம் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பங்குகளின் விலை 0.87 சதவீதம் சரிந்து 586.30 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
வாலட் சேவை
ஒன்97 கம்யுனிகேஷன் நிறுவனம் ரீசார்ஜ், மொபைல் பில், மின்சார கட்டணம் மற்றும் ஆன்லைன் வாலெட் போன்ற சேவை வழங்கும் நிறுவனமாக பெடிஎம் நிறுவனத்தைத் தொடங்கியது. பின்னர் அதிலிருந்து இ-காமர்ஸ், பேமன்ஸ் வங்கி போன்றவற்றைத் தொடங்கி வேகமாக பேடிஎம் வளர தொடங்கியது. சாப்ட் பாங்க், அலிபாபா, ஆண்ட் ஃபினான்ஸியல் என பல நிறுவனங்கள் பேடிஎம்-ல் முதலீடு செய்ய தொடங்கின. தொடர்ந்து பேடிஎம் மால் உள்ளிட்ட சேவைகளைத் தொடங்கி ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக பேடிம் வளர்ந்தது.
ஐபிஓ
2021 நவம்பர் மாதம் ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு வந்தது. அப்போதே அனுபவ முதலீட்டாளர்கள் பலர் பேடிஎம் நிறுவனத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகம் பணத்தைப் போடும் போது பெரும் முதலீட்டாளர்கள் வெளியேறுவார்கள் என கூறினர். இப்போது அவர்கள் எல்லாம் வெளியேறிய நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பு 100 சதவீதம் சரிந்துள்ளது. இப்போது இங்கு இருந்து பேடிஎம் நிறுவனம் எப்படி வளர்ச்சிப் பாதையில் செல்ல போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். இதுபோன்ற வாலட் நிறுவனங்கள் பணத்தை எரிக்கும் ஸ்டார்ட்அப்களாக உள்ளன. இதுவரையில் ஒரு வருடம் கூட லாபத்தைப் பதிவு செய்யவும் இல்லை.