ஆகஸ்ட் 2020 மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் உச்சபட்ச மின்சார தேவை 5.6 சதவிகிதம் குறைந்து இருக்கிறது. இது ஜூலை மாதத்தில் பதிவான 2.61 சதவிகித சரிவை விட அதிகம் என மின்சார அமைச்சகத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆகஸ்ட் முதல் இரண்டு வாரங்களில் 167.49 ஜிகா வாட் மின்சாரம் தேவைப்பட்டு இருக்கிறது. 2019 ஆகஸ்டில் பதிவு செய்யப்பட்ட 177.52 ஜிகா வாட் மின்சாரத்தில் இருந்து, இது 5.65 சதவிகிதம் குறைந்துள்ளது.
இந்த 2020-ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் உச்சபட்ச மின்சார தேவை 170.54 ஜிகாவாட்டாக பதிவாகி இருக்கிறது. இதை, கடந்த ஜூலை 2019-ல் 175.12 ஜிகா வாட் மின்சாரத்துடன் ஒப்பிட்டால் 2.61 சதவிகிதம் குறைவு.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, மத்திய அரசு, கடந்த மார்ச் 25 முதல் லாக் டவுன் அறிவித்தது. அன்று முதல் இந்தியாவில் மின்சார தேவை சரியத் தொடங்கியது.
இப்போது தான், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, மத்திய மாநில அரசுகள் லாக் டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டு இருக்கின்றன. இந்த தளர்வுகளுக்குப் பின்னரே, மின்சார தேவை இந்தியாவில் மீண்டும் பழைய நிலைக்கு வரத் தொடங்கி இருக்கிறது.
லாக் டவுன் கால கட்டத்தில், ஏப்ரல் மாதத்தில் மின் தேவை சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது. மெல்ல லாக் டவுனை தளர்த்தத் தொடங்கிய மே மாதம் முதல், மின்சார தேவையும் அதிகரிக்கத் தொடங்கியது.
தற்போது ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவில், முந்தைய அளவுக்கு மின்சார தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும், துறை சார் வல்லுநர்கள் கூறுகையில், இந்த ஆகஸ்ட் முதல், மின்சார நுகர்வு மற்றும் மின்சார தேவை பழைய நிலைக்கு வரலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். இருப்பினும், ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த பிறகு மட்டுமே முழுமையான மாதாந்திர தரவுகள் கிடைக்கும், அப்போது தான் என்ன நடந்து இருக்கிறது என்பது தெரிய வரும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
கடந்த 2020 ஜூன் மாதத்தில், அதிகபட்ச மின் தேவை 9.6 சதவிகிதம் குறைந்தது. கடந்த 2019 ஜூன் மாதத்தில் 182.45 ஜிகாவாட்டாக இருந்தது, இந்த ஜூன் 2020-ல் 164.98 ஜிகாவாட்டாக சரிந்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது.