ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப்போட்டு உள்ள பெகாசஸ் ஸைப்வேர் பிரச்சனையில் பல அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது புதிதாக ஒரு தொழிலதிபர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் முக்கியமான டெக் நிறுவனமான NSO தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களைக் கண்காணிக்க உருவாக்கப்பட்டது.
NSO தனது பெகாசஸ் ஸ்பைவேர் சேவையை அரசுக்கு மட்டுமே அளித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவில் பல தனிநபர்களைத் தங்களது ஸ்மார்ட்போன் மூலமாக உளவு பார்க்கப்பட்டது எப்படி என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
பெகாசஸ் ஸ்பைவேர்
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. இதில் ராகுல் காந்தி உட்படப் பலரின் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது புதிதாக அனில் அம்பானி பெயரும், ADAG குழுமத்தின் உயர் அதிகாரி ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அனில் அம்பானி
அனில் திருபாய் அம்பானி தலைமையிலான ADAG குழுமம் தொடர்ந்து வர்த்தகச் சரிவை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது அனில் அம்பானி பயன்படுத்தி வந்த மொபைல் எண் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ADAG குழும அதிகாரிகள்
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் அனில் அம்பானி மட்டும் ADAG குழுமத்தின் சில உயர் அதிகாரிகளும், தலைமை கார்பரேட் செய்தி தொடர்பாளரான டோனி ஜோசுதாசன் மற்றும் அவரது மனைவியின் மொபைல் எண்ணும் கண்காணிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிற முக்கிய நிறுவனத் தலைவர்கள்
இவர்களைத் தொடர்ந்து டசால்ட் ஏவியேஷன் இந்திய உறுப்பினர் வெங்கடராவ் போசினா, சாப் இந்தியாவின் முன்னாள் தலைவர் இந்திரஜித் சியால், போயிங் இந்தியா தலைவர் பிரத்யூஷ் குமார், பிரான்ஸ் எனர்ஜி நிறுவனமான EDF தலைவர் ஹர்மானிஜித் நெகி ஆகியோரின் பெயர்களும் சமீபத்தில் வெளியான பெகாசஸ் பிராஜெட் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
சுப்பிரமணியன் சாமி டிவீட்
பெகாசஸ் திட்டம் குறித்துச் சுப்பிரமணியன் சாமி இரண்டு முக்கியமான டிவீட்களைச் செய்துள்ளார்.
1. மறைக்க ஒன்றுமே இல்லையென்றால், மோடி இஸ்ரேல் பிரதமருக்கு NSO-வின் பெகாசஸ் திட்டத்திற்கு இந்தியாவில் இருந்து யார் பணம் செலுத்தியது என்பதைத் தெரிவிக்கக் கடிதம் எழுத வேண்டும் எனச் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
2. NSO-வின் டேப்பிங் சர்வர்-க்குக் கிளைட் இடத்தில் பிசிக்கல் இணைப்பும், உதவும் குழுவும் வேண்டும். அப்படியென்றால் டெல்லியில் அலுவலகம் இருக்க வேண்டும் என்று மற்றொரு டிவீட்டில் தெரிவித்துள்ளார்.