முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வருகிற மார்ச் 18ஆம் தேதி 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும் அதிகளவிலான எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகள் 2வது விவசாயப் பட்ஜெட் அறிக்கையில் மிக முக்கியமான அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர்.
உக்ரைன் - ரஷ்யா போருக்குப் பின் இந்தியா விவசாயப் பொருட்களுக்குச் சர்வதேச சந்தையில் மிகப்பெரிய அளவிலான டிமாண்ட் உருவாகியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் விவசாய பட்ஜெட்டில் வரும் அறிவிப்பில் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
2வது விவசாயப் பட்ஜெட்
முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது 2வது விவசாயப் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம், நெல்லுக்கு அதிகக் கொள்முதல் விலை, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் வழங்குவது போல் உள்ளீட்டு மானியம், விவசாயிகளின் குழந்தைகளுக்கான கல்விக் கடன் தள்ளுபடி, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள், மாநிலம் முழுவதும் விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகளாக உள்ளது.
ஓய்வூதியம்
58 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண் விவசாயிகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் விவசாயிகளுக்கும் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ. 3,000 பென்ஷன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கும் நிலையில் அதை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் விரைவில் எடுத்து இந்தப் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் வெளி வருமா என்ற ஏக்கம் அனைத்து விவசாயிகளிடமும் இருக்கிறது.
தெலுங்கானா, ஆந்திரா
தெலுங்கானா மாநிலம் விவசாயிகளின் முதலீட்டு ஆதரவுத் திட்டத்தின் (Rythu Bandhu Scheme) கீழ் ஆண்டுக்கு இரண்டு பயிர்களுக்கு உள்ளீட்டு மானியமாக ஏக்கருக்கு ரூ.10,000 வழங்குகிறது. இதையடுத்து ஆந்திர மாநிலம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,500 வழங்க தொடங்கியுள்ளது. இதேபோன்ற மானியத்தைத் தமிழக விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகளும் எழுந்து வருகிறது.
மின்சார இணைப்பு
சுமார் 75,000 சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் பம்ப் செட்களை இயக்குவதற்குக் கட்டண மின்சாரத்தை நம்பியிருக்கிறார்கள். இந்த இணைப்புகளை இலவச மின் இணைப்புகளாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கைக்கும் வைக்கப்பட்டு உள்ளது.
கேரளா நெல் விலை
கேரளாவில் 2020 முதல் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,795 ரூபாய் (எம்எஸ்பி ஊக்கத்தொகையுடன்) வழங்கி வருவதாகவும், சாகுபடி செலவை பொறுத்துத் தமிழகம் குவிண்டாலுக்கு 3,675 ரூபாய் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் கூறியுள்ளார். தற்போது, தமிழ்நாடு மாநிலத்தில் நெல் ரகத்திற்கு (ஊக்கத்துடன்) கொள்முதல் விலை ரூ.2,060 ஆகவும், பொது ரகத்துக்கு ரூ.2,015 ஆகவும் உள்ளது.