கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சரிவின் காரணமாக நாட்டு மக்களின் வருமானமும் வேலைவாய்ப்பும் அதிகளவில் பாதித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இதன் எதிரொலியாக இந்தியாவில் இருக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தற்போது புதிய பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.
பொதுவாக வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினால் ஆட்டோ டெபிட் சேவை மூலம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிகளில் கடனுக்கான ஈஎம்ஐ தொகையைப் பெற்றுக்கொள்ளும். இந்தச் சேவையின் கீழ் தான் தற்போதும் அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் ஈஎம்ஐ தொகையை வசூலிக்கிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மக்களின் நிதிநிலை மோசமாக இருக்கும் காரணத்தால் பின்டெக் மற்றும் என்பிஎப்சி நிறுவனங்கள் ஆட்டோ டெபிட்-ல் எப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான தோல்விகளை எதிர்கொண்டு வருகிறது.
ஆட்டோ டெபிட்
கொரோனாவால் ஏற்படப் பாதிப்பால் என்பிஎப்சி நிறுவனங்களின் low-rated வாடிக்கையாளர்கள், வர்த்தக வாகனங்களுக்காகக் கடன் பெற்றவர்கள், பின்டெக் நிறுவனங்கள் மூலம் கடன் பெற்றவர்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் அவர்களது கணக்கில் பணம் இல்லாமலும், ஈஎம்ஐ அளவிற்கும் குறைவாகவும் இருக்கிறது.
இதனால் பின்டெக் மற்றும் என்பிஎப்சி நிறுவனங்கள் ஆட்டோ டெபிட் அதிகளவில் தோல்வி அடைந்து வருகிறது.
40 சதவீதம் தோல்வி
ஆட்டோ டெபிட் குறித்து National Automated Clearing House வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் கடன் வாங்கியவர்களில் சுமார் 40.1 சதவீதம் மக்களின் ஆட்டோ டெபிட் முறை தோல்வி அடைந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கணக்கில் போதிய நிதி இல்லாத காரணத்தால் ஆட்டோ டெபிட் முறை தோல்வி அடைந்துள்ளது என NACH தளம் தெரிவித்துள்ளது.
இது பிப்ரவரி மாதம் 31.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கிகள்
பொதுவாகப் பெரிய வங்கிகள் அனைத்தும் தங்களது வாடிக்கையாளர்களின் கடனுக்கான ஈஎம்ஐ தொகையை உள்நிதிமுறையின் கீழ் வசூலிக்கும் காரணத்தால் Intra bank பரிவர்த்தனை தரவுகள் NACH தளத்திற்குக் கிடைக்காது.
இந்நிலையில் தற்போது கடனை செலுத்தாத வாடிக்கையாளர்கள் பெருமளவில் என்பிஎப்சி வாடிக்கையாளர்களாக உள்ளனர் என NACH தெரிவித்துள்ளது.
2.5 சதவீதம்
பெருமளவிலான வாடிக்கையாளர்கள் கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் என்பிஎப்சி அமைப்புகள் தங்களது கடன் புத்தகத்தில் சுமார் 2.5 சதவீத கடன்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
மக்களின் நிலை
இந்தக் கொரோனா காலத்தில் மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து தவித்து வரும் நிலையில், நிதி தேவைக்காகப் பின்டெக் நிறுவனங்களில் இருந்து கடன் பெறுகிறார்கள். இதனால் பொருளாதாரச் சூழ்நிலை இன்னும் மீட்சி அடையாத இந்த நிலையில் கடன் சுமை அதிகரித்து வரும் காரணத்தால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
30 சதவீத வட்டி
சில பின்டெக் நிறுவனங்கள் மக்களின் அவசரத்தையும், பணத்தின் தேவையையும் வர்த்தகமாக மாற்றிக்கொள்ள முடிவு செய்து பர்சனல் லோன்களுக்கு 30 சதவீத வட்டியுடன் கடனளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மனிடேப்
பின்டெக் நிறுவனங்களின் பிணையற்ற கடன் தான் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் கூறப்பட்டு வரும் நிலையில், நாட்டின் முன்னணி பின்டெக் நிறுவனமான Moneytap-ன் துணை நிறுவனர் அனுஜ் காக்கர் 6 மாதம் கடன் சலுகைக்குப் பின் இந்த அக்டோபர் மாதத்தில் தான் அனைத்து வாடிக்கையாளர்களிடம் கடனை வசூலித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.