இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக வங்கிகள் மற்றும் வங்கிக் கடன் மத்தியில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.
உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் பொதுவாக வங்கிகள் ரீடைல் கடன் சேவைகளைத் தாண்டி நிறுவன கடன், வர்த்தக கடனில் தான் அதிகளவில் கவனம் செலுத்தும். இந்த பிரிவில் தான் அதிக வருமானம், இதேபோல் அதிக தொகைக்கு வர்த்தகம் செய்ய முடியும்.
ஆனால் கொரோனா தொற்றுக்குப் பின்பு வர்த்தக பாதிப்பின் காரணமாக நிறுவன கடன்களில் சில வாராக் கடனாக மாறியுள்ளது. இந்த நிலையைச் சமாளிக்க தற்போது வங்கிகள் அதிகளவில் ரீடைல் கடன்களில் முக்கியத்துவம் செலுத்துகிறது.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ஏற்பட்டு உள்ள இந்த மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் சந்தையில் ஏற்பட்ட மாற்றம் தான்.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று, லாக்டவுன் கட்டுப்பாடுகள், மக்கள் மத்தியில் வருமானத்தில் ஏற்பட்டு உள்ள சரிவு ஆகியவற்றின் மூலம் வர்த்தக கடன் வாங்குவோரின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தால் பெரிய அளவிலான வருமானத்தைப் பெறமுடியாது என்பதால் நிறுவனங்கள் வர்த்தக கடனை வாங்கு யோசிக்கிறது.
வருமானம் இழப்பு
ஆனால் இதேவேளையில் மக்கள் மத்தியில் அதிகமானோர் வருமானத்தை இழந்த காரணத்தாலும், வேலைவாய்ப்பை இழந்த காரணத்தால் மாத செலவுகளுக்கும் அதிகளவில் வங்கி மற்றும் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்று வருகின்றனர்.
நிறுவனங்கள் மற்றும் சேவை துறை கடன்
இதன் எதிரொலியாகக் கடந்த 12 மாதத்தில் இந்திய நிறுவனங்கள் மற்றும் சேவைத் துறை பெற்றுள்ள கடன் அளவு சரிந்துள்ளது, அதேபோல் ரீடைல் லோன் பிரிவு அதாவது தங்க கடன், கிரெடிட் கார்டு லோன் ஆகியவை பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்துள்ளது.
ரீடைல் அல்லது பர்சனல் லோன் பிரிவு
இந்திய வங்கி அமைப்பில் ரீடைல் அல்லது பர்சனல் லோன் பிரிவு வர்த்தகம் மொத்த கடன் வர்த்தகத்தில் வெறும் 26 சதவீதம் மட்டுமே. ஜூலை 2021 வரையில் முடிவடைந்த 12 மாத காலகட்டத்தில் ரீடைல் லோன் பிரிவு 11.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முந்தைய 12 மாத காலகட்டத்தில் 9 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
தங்க கடன்
இந்த ரீடைல் லோன் பிரிவில் தங்க கடன் மட்டும் கடந்த 12 மாதத்தில் சுமார் 77.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 27,223 கோடி ரூபாய் உயர்ந்து 62.412 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் தங்கக் கடன் 338.76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கியின் மொத்த தங்க கடன் வர்த்தக மதிப்பு 21,293 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தங்க கடனும் கொரோனாவும்
தங்க கடனில் ஏற்பட்டு உள்ள இந்த உயர்வு கொரோனா மூலம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள வருமானம் மற்றும் வருவாய் பாதிப்புகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் 20.1 சதவீதம் உயர்ந்திருந்தாலும் மக்களின் நிலையை இன்னமும் உயர்வில்லை.
தங்கம் இறக்குமதி
சிவாஜி படத்தில் சொல்வது போல் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி வருகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறி வருகிறார்கள். இதற்கு உதாரணமும் இந்தியாவில் ஒவ்வொரு மாதம் அதிகரித்து வரும் தங்க இறக்குமதி தான்.
தங்க நகை விற்பனை
ஒருபக்கம் மக்கள் பணம் இல்லாமல் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வரும் நிலையில் மறுபக்கம் தங்க நகைகளை வாங்குவோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள வேளையிலும் தங்க நகை விற்பனை அதிகரித்து வருகிறது.
கிரெடிட் கார்டு நிலுவை
தங்க கடன் போலவே கிரெடிட் கார்டு அவுட்ஸ்டேன்டிங் பணத்தில் அளவு ஜூலை 2021 வரையில் முடிந்த 12 மாதத்தில் 10,000 கோடி ரூபாய் அதிகரித்து 9.8 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது. ஜூலை 2020 வரையில் முடிந்த 12 மாதத்தில் கிரெடிட் கார்டு அவுட்ஸ்டேன்டிங் தொகையின் அளவு 9.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
தொழிற்துறை கடன்
இதேபோல் தொழிற்துறை மற்றும் சேவை துறை கடன் அளவில் 1 சதவீதமும், அதற்கு முன்பு 2.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
வீட்டுக் கடன் பிரிவு
மேலும் ரீடைல் கடன் பிரிவில் வீட்டுக் கடன் பிரிவு மட்டும் சுமார் 51.2 சதவீதம் வர்த்தகத்தைப் பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஜூலை 2021 வரையில் முடிந்த 12 மாத காலகட்டத்தில் 8.9 சதவீத வளர்ச்சி அடைந்திருந்த நிலையில் இதற்கு முந்தைய 12 மாத காலகட்டத்தில் 11.1 சதவீதமும் உயர்ந்து மொத்த கடன் அளவு 14.66 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வாகன கடன் பிரிவு
வாகன கடன் பிரிவில் ஜூலை 2021 வரையில் முடிந்த 12 மாத காலகட்டத்தில் 7.3 சதவீத வளர்ச்சியும், இதற்கு முந்தைய 12 மாத காலகட்டத்தில் 2.7 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது. இதேபோல் விவசாயம் மற்றும் இதைச் சார்ந்த கடன் பிரிவில் 12.54 சதவீதம், 5.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.