இந்தியாவை சேர்ந்த அரசியல்வாதிகள் தங்களுடைய பணத்தை குறிப்பிட்ட சில நிறுவனங்களிலும் , பங்குச்சந்தைகளிலும் கணிசமான அளவு முதலீடு செய்து லாபம் பார்க்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் தாங்கள் எதில் முதலீடு செய்திருக்கிறோம் என்ற விவரங்களை வெளிப்படையாக வெளியிடுவது கிடையாது. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலைமை அப்படி இல்லை.
அமெரிக்காவில் அரசியல் தலைவர்கள், எம்பிக்கள் எந்தெந்த பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள் , அதில் எப்படி வர்த்தகம் செய்து லாபம் பார்க்கிறார்கள் என்ற விவரங்கள் வெளிப்படையாக தெரியும். பெரும்பாலான முதலீட்டாளர்கள் இதுபோன்ற அரசியல் தலைவர்கள், எம்பிக்கள் உள்ளிட்டவர்களின் போர்ட்போலியோவை பின்தொடர்ந்து அதற்கேற்ற வகையில் தங்களுடைய முதலீடுகளை கூட மாற்றி அமைத்துக் கொள்வார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு நிலைமை இதுவரை கிடையாது.

பெர்பிளெக்சிட்டி நிறுவனம் பெர்பிளெக்சிட்டி ஃபைனான்ஸ் என்ற வசதியை கொண்டு வந்துள்ளது. இதில் அமெரிக்க அரசியல்வாதிகளின் பங்குச்சந்தை நடவடிக்கைகள் அப்டேட்களுடன் பயனர்களுக்கு காண்பிக்கப்படுகிறது. இதனை பெர்பிளெக்சிட்டி தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அம்ரித் என்பவர் இந்திய அரசியல்வாதிகள் எதில் எல்லாம் முதலீடு செய்து வர்த்தகம் செய்கிறார்கள் என்பதை நான் எப்படி ட்ராக் செய்வது ,அமெரிக்காவில் நான்சி பெலோசியின் போர்ட்போலியோவை பின்தொடர்ந்து பல்வேறு வர்த்தகர்களும் பெரிய அளவில் லாபம் பார்க்கிறார்கள் , அதேபோன்ற ஒரு விஷயத்தை நான் இந்தியாவிலும் மேற்கொள்ள வேண்டும் , வழக்கமாக தேர்தலில் நிற்கும் போது பிரமாண பத்திரத்தில் எதில் எல்லாம் முதலீடு செய்து இருக்கிறோம் என்பதை அரசியல்வாதிகள் தாக்கல் செய்வார்கள் ஆனால் சாதாரண நாட்களில் அந்த விவரங்கள் பொதுமக்களாகிய எங்களுக்கு தெரிய வருவதில்லை என கேள்வி எழுப்பியிருக்கிறார் .
அதற்கு பதில் அளித்திருக்கும் பெர்பிளெக்சிட்டி தலைமை செயல் அதிகாரியான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் அடுத்த சில வாரங்களுக்குள் இந்திய அரசியல்வாதிகள் எதில் எல்லாம் முதலீடு செய்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார் . எனவே பெர்பிளெக்சிட்டி ஃபைனாஸ் கூடிய விரைவில் இந்திய பயனர்களுக்கும் இந்த வசதியை கொண்டு வர இருப்பது உறுதியாகியுள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்களை பொறுத்தவரை இந்த வசதி மேலும் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும். பெர்பிளெக்சிட்டி இதனை இந்தியாவில் கொண்டு வந்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெர்பிளெக்சிட்டி ஃபைனான்ஸ் பெரிய அளவில் பிரபலமாகும். அதே வேளையில் எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான மாற்று கருத்துகளும் முன் வைக்கப்படுகின்றன. இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் பினாமி மூலமாகவே முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்பதால் அமெரிக்கா போன்ற வெளிப்படை தன்மை இருக்குமா என்பதே சந்தேகமா என சிலர் கூறுகின்றனர்.
அரசியல்வாதிகளின் பங்குச்சந்தை நடவடிக்கைகள் வெளிப்படையாக தெரிய வந்தால் அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கும் , பரஸ்பர வார்த்தை மோதல்களுக்கும் வழிவகுத்து பெரிய பூகம்பத்தை உண்டாக்கும் என சிலர் கருத்து கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications