இந்தியாவில் 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதற்காகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையிலும், ரூபாய் மதிப்பு சரிந்த நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்தது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்.
கடந்த 45 நாட்களில் 5 மாநிலங்களில் தேர்தல் அதிரடியாக நடந்துகொண்டு இருந்த வேளையில் பெட்ரோல், டீசல் விலை வியப்பு அளிக்கும் வகையில் 2 முறை குறைக்கப்பட்டது யாராலும் மறக்க முடியாது.
இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா உட்பட 5 மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை உயர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது எனத் தமிழ் குட்ரிட்டனஸ் தளம் கணித்திருந்த நிலையில், இன்று நடந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இந்தியாவில் சுமார் 18 நாட்களுக்குப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாத சூழ்நிலையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 12 முதல் 15 பைசாவும், டீசல் ஒரு லிட்டருக்கு 16 முதல் 18 பைசாவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை
இப்புதிய விலை உயர்வின் மூலம் இந்தியாவிலேயே மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96.95 ரூபாய் என்ற அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் ரூபாய் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு இன்று, அதாவது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
18 நாட்களுக்குப் பின் அறிவிக்கப்பட்டு உள்ள விலை உயர்வின் மூலம் சென்னையில் பெட்ரோல் 92.55 ரூபாய்க்கும், டீசல் 85.90 ரூபாய்க்கும், பெங்களூரில் பெட்ரோல் 92.60 ரூபாய்க்கும், டீசல் 85.81 ரூபாய்க்கும், டெல்லியில் பெட்ரோல் 90.55 ரூபாய்க்கும், டீசல் 80.91 ரூபாய்க்கும், மும்பையில் பெட்ரோல் 96.95 ரூபாய்க்கும், டீசல் 87.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பல லட்சம் பேர் நாள்தோறும் பாதித்து வரும் இந்தச் சூழ்நிலையில், சாமானிய மக்களால் மருந்து வாங்க முடியாமலும், மருத்துவமனை கட்டணத்தைச் செலுத்த முடியாமலும், ஏன் இறந்தவர்களை எரிக்கக் கூடப் பணம் இல்லாமல் தவித்து வரும் நிலை தான் இந்தியாவில் நிலவுகிறது.
லாக்டவுன் கட்டுப்பாடுகள்
மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை அளவீடு ஏப்ரல் மாதத்தில் தடாலடியாக 7.97 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 மாத உயர்வை அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் கிட்டதட்ட 8 சதவீதத்தை அடைந்துள்ள காரணத்தால், நாடு முழுவதும் சுமார் 70 லட்சம் பேர் வேலையை இழந்து தவித்து வருவதாக CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.
சாமானிய மக்கள் கவலை
ஒருபக்கம் மக்களை விடாமல் துரத்தும் கொரோனா தொற்று, மறுபக்கம் லாக்டவுன் காரணமாக மெல்ல மெல்ல இழந்து வரும் வர்த்தகங்கள் மூலம் அதிகப்படியான வேலைவாய்ப்பு இழப்பு மூலம் மக்கள் தங்களது வாழவே இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வரும் நிலையில், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை அதிகளவில் பாதிக்கும்.
உணவு பொருட்களின் விலை உயரும்
எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு காய்கறி, பழங்கள், உணவு பொருட்களில் இருந்து கார் பைக் வரையில் போக்குவரத்தை நம்பி இயங்கும் அனைத்து உற்பத்தி மற்றும் தயாரிப்பு பொருட்களின் விலை பாதிக்கும். இதனால் சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் கடினமாகும்.