இந்தியாவில் சுமார் 40 நாட்களுக்குப் பின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 2 லட்சத்திற்குக் குறைவான அளவை எட்டியுள்ளது எனச் சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆனாலும் நாட்டில் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அடுத்த சில வாரங்களுக்குக் கட்டாயம் தொடரும் நிலை தான் தற்போது உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் சாமானிய மக்களை அதிகம் பாதிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மே மாதத்தில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
மே மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை இன்றுடன் 13 நாட்களாக உயர்ந்துள்ளது. இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 23 பைசாவும், டீசல் ஒரு லிட்டருக்கு 25 பைசாவும் அதிகரித்துள்ளது.
டெல்லி விலை நிலவரம்
இதன் மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 93.44 ரூபாயும், டீசல் விலை 84.32 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் மே மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை 3.04 ரூபாயும், நாட்டின் வர்த்தகச் சந்தையைக் கடமைக்கும் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தும் டீசல் விலை 3.59 ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது.
மும்பை விலை நிலவரம்
மேலும் நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் தொட 30 பைசா மட்டுமே குறைவாக உள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99.71 ரூபாய்க்கும், டீசல் விலை 91.57 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை விலை நிலவரம்
சென்னையில் இன்றைய உயர்வின் மூலம் பெட்ரோல் விலை 95.06 ரூபாயும், டீசல் விலை 89.11 ரூபாயாக அதிகரித்துள்ளது. பெங்களூரில் பெட்ரோல் விலை 96.55 ரூபாயும், டீசல் விலை 89.39 ரூபாயாகவும், ஹைதராபாத்-ல் பெட்ரோல் விலை 97.12 ரூபாயும், டீசல் விலை 91.92 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வல்லரசு நாடுகள் பொருளாதாரம்
சீனாவைப் போல் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இதனால் வல்லரசு நாடுகளில் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு எண்ணிக்கை ஆகியவை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இதனால் வல்லரசு நாடுகளில் எரிபொருள் தேவை என்பது கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து வரும் வேளையில் இன்று சர்வதேசச் சந்தையில் WTI கச்சா எண்ணெய் 65.97 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 68.40 டாலருக்கும் உயர்ந்துள்ளது.