ஈரான் போர் இந்தியாவில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. முதலில் எல்பிஜி தட்டுப்பாடு, சிலிண்டர் விலை உயர்வு என பாதிப்புகளை சந்தித்த சாமானிய இந்திய மக்களுக்கு அடுத்ததாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு பேரிடியாக வந்து விழுந்திருக்கிறது.
இந்தியாவில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹெச்பி ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் மாறவே இல்லை. இந்நிலையில் தான் ஈரான் போர் அதற்கு ஆப்பு வைத்தது. பிப்ரவரி 28இல் தொடங்கிய ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து நிற்கிறது.
இந்தியாவில் நயாரா, ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தின. இருந்தாலும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல் 3 மாதங்கள் தாக்கு பிடித்தன. ஆனாலும் ஈரான் போர் முடிந்து கச்சா எண்ணெய் சப்ளை சரியாவதற்கான அறிகுறிகளே இல்லை. இந்நிலையில் தான் பிரதமர் மோடி மக்கள் பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.
இந்நிலையில் நஷ்டத்தை தாங்க முடியாமல் இந்தியாவில் கடந்த மே 15-ந்தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 6 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 103.90 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதேபோல், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் 8 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 95.47 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால் பல்வேறு பொருட்களின் விலைகளும் உயர்வு கண்டன.வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தங்களின் பட்ஜெட்டிலேயே கை வைத்து விட்டதாக புலம்பினர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகள் அதிகரித்து ரூ.104.49 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் அதிகரித்து 96.11 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இயற்கை எரிவாயு எனப்படும் சிஎன்ஜி ஒரு கிலோ 93.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே வாரத்தில் 2 முறை விலை உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியும், கவலையும் அடைய செய்து இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பால், காய்கறி, வாடகை கார், வாடகை ஆட்டோ, ஸ்விக்கி, சோமேட்டோ ஆர்டர் என பலவற்றுக்கும் இனி நாம் கூடுதலாக விலை கொடுக்க வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications

