இந்தியாவில் சில்லறை பணவீக்கம் மற்றும் மொத்த விலை பணவீக்கம் உயர முக்கியக் காரணமாக விளங்குவது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்பட்டு உள்ள உயர்வு என்பது அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாகத் தெரிகிறது.
இந்நிலையில் இந்தியாவில் 5 மாநிலத்தில் தேர்தல் நடக்கும் காரணத்திற்காக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் இதன் விலை குறைந்த போதும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைச் சுமார் 15 நாட்களாகக் குறைக்காமல் இருந்தது.
இந்நிலையில் மேற்கு வங்க தேர்தலில் இன்னும் 4 கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நடக்க உள்ள நிலையில், தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.
15 நாட்களுக்குப் பின் விலை குறைப்பு
கிட்டதட்ட 15 நாட்களுக்குப் பின் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வியாழக்கிழமை சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டு உள்ள விலை சரிவுக்கான ஆதாயத்தை மக்களுக்கு அளித்துள்ளது. இதனால் மக்கள் தினமும் பயன்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாகக் குறைய உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை சரிவு
இன்று வெளியான அறிவிப்புகள் அடிப்படையில் ரீடைல் விற்பனையகங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 16 பைசாவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 14 பைசா குறையும் எனத் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு பெரிய அளவிலான லாபத்தை அளிக்கவில்லை என்றாலும், கணிசமான லாபத்தைச் சாமானிய மக்களுக்கு அளிக்கும்.
டெல்லி விலை நிலவரம்
இதன் மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90.56 ரூபாயில் இருந்து 90.40 ரூபாய்க்குச் சரிந்துள்ளது. மேலும் டீசல் விலை 80.87 ரூபாயில் இருந்து 80.73 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் இந்தியாவில் பிற பகுதிகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. சரி சென்னையில் என்ன விலை தெரியுமா..?!
சென்னை விலை நிலவரம்
15 நாட்களுக்குப் பின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 0.15 பைசா குறைந்து 92.43 ரூபாய்க்கும், டீசல் விலை 0.13 பைசா சரிந்து 85.75 ரூபாய்க்கு ரீடைல் விற்பனையகம், அதாவது பெட்ரோல் பங்க்-களில் விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 65 டாலருக்குக் குறைவாக இருக்கும் காரணத்தால் 15 நாள் இடைவேளையில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் விலை அளவீடுகளைக் கணக்கிட்டு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைத்துள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய்
ஆனால் பிரென்ட் கச்சா எண்ணெய் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இதன் விலை 66 டாலரைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் பிற முக்கியக் கச்சா எண்ணெய் விலையும் உயர அதிகளவில் வாய்ப்புகள் இருப்பதாகக் கணிப்புகள் வெளியாக உள்ள நிலையில் மே மாத துவக்கத்தில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.
மும்பையில் ப்ரீமியம் பெட்ரோல் விலை
இன்றைய விலை சரிவுக்கு முன்பு மார்ச் 30ஆம் தேதி பெட்ரோல் விலையை 22 பைசாவும், டீசல் விலை 23 பைசா வரையிலும் குறைந்து குறிப்பிடத்தக்கது. இரண்டு முறை பெட்ரோல் விலை குறைந்த நிலையிலும் மும்பையில் ப்ரீமியம் பெட்ரோல் விலை தொடர்ந்து 100 ரூபாய்க்கு அதிகமாகவே விற்பனை செய்யப்படுகிறது.