இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் அனைத்து நுகர்வு மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக எரிபொருள் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால் ஆயுத பூஜை தினத்தில் பெட்ரோல், டீசல் விலை இரண்டும் தலா 35 பைசா வரையில் உயர்ந்து சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் ஒரு லிட்டருக்கு தலா 35 பைசா வரையில் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய உச்சம்
இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.10 ரூபாயாக உயர்ந்துள்ளது. டீசல் விலை 97.93 ரூபாயாக உயர்ந்துள்ளது.
டீசல் விலை 100
இந்தியாவில் பல மாநிலத்தில் டீசல் விலை 100 ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்துள்ள காரணத்தால் சரக்குப் போக்குவரத்தை அதிகம் நம்பியிருக்கும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. இது நுகர்வோர் சந்தையில் அதவும் பண்டிகை காலத்தில் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தும்.
இன்றைய பெட்ரோல் விலை (Oct 14)
சென்னை - 102.10 ரூபாய், டெல்லி - 104.79 ரூபாய், கொல்கத்தா - 105.43 ரூபாய், மும்பை - 110.75 ரூபாய், பெங்களூர் - 108.44 ரூபாய், ஹைதராபாத் - 109.00 ரூபாய், கோழிக்கோடு - 105.26 ரூபாய், போபால் - 113.37 ரூபாய், இந்தூர்- 113.40 ரூபாய்.
இன்றைய டீசல் விலை (Oct 14)
சென்னை - 97.93 ரூபாய், டெல்லி - 93.52 ரூபாய், கொல்கத்தா - 96.63 ரூபாய், மும்பை - 101.40 ரூபாய், பெங்களூர் - 99.26 ரூபாய், ஹைதராபாத் - 102.04 ரூபாய், கோழிக்கோடு - 98.93 ரூபாய்.
கச்சா எண்ணெய் விலை
இன்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.68 சதவீதம் அதிகரித்து 80.99 டாலராக உயர்ந்துள்ளது, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.70 சதவீதம் அதிகரித்து 83.76 டாலராக உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதி
இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் 80 சதவீதம் வெளிநாட்டில் இறக்குமதி செய்வது வாயிலாகவே செய்யப்படும் காரணத்தால் இந்திய அரசு டாலர் வாயிலாகத் தான் பணத்தைச் செலுத்த வேண்டும்.
ரூபாய் மதிப்பு
இதனால் கச்சா எண்ணெய் விலை மட்டும் அல்லாமல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் படி இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 75.30 ரூபாயாக உள்ளது.
தேர்தல் எப்போது
பொதுவாக இந்தியாவில் தேர்தல் நடந்தால் மட்டுமே மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் விலையை எவ்விதமான மாற்றமும் செய்யாமல் பல வாரங்கள் ஓரே விலையில் வைத்திருக்கும். இதனால் மக்கள் தேர்தலுக்காகக் காத்திருக்கின்றனர்.