ஈரான் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சுமார் 2 மாதங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து நின்று போயுள்ளது. இதனால் இந்தியா வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. அதுமட்டுமில்லாமல் பல மடங்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
2 மாதத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விற்பனையில் நஷ்டத்தை சந்தித்து வந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளன. சாமானிய மக்களுக்கு இது பெரிய அதிர்ச்சியாக வந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை , டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகள் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.84க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ. 3.14 விலை உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ. 3.11 விலை உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் டீசல் ரூ. 95.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வால் அனைத்து வகையிலான பொருட்களின் விலையும் உயரும். சில தினங்கலுக்கு முன்னர் தான் பிரதமர் மோடி மக்கள் பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.இயன்றவரை பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தினார்.
அந்நிய செலாவணி இருப்பை சேமிக்க தங்கம் வாங்குவதை தவிர்க்க அறிவுறுத்தினார். இதனை அடுத்து தங்கம், வெள்ளி இறக்குமதி வரியை அரசு 6%இல் இருந்து 15%ஆக உயர்த்தியது. இதனால் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும்போது, அதன் தாக்கம் வெறும் வாகன எரிபொருளோடு நின்றுவிடுவதில்லை. போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்: இவை லாரிகள் மூலம் தினசரி கிராமங்களில் இருந்து சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன. டீசல் விலை ஏறும்போது, சரக்குக் கட்டணம் (Freight charges) உயர்வதால் காய்கறிகளின் விலை உடனடியாக உயரும்.
பால் மற்றும் முட்டை: பால் பண்ணை வாகனங்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட வாகனங்களின் இயக்கச் செலவு அதிகரிப்பதால், பால் விலை உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தியுள்ளது.
மளிகைப் பொருட்கள்: சோப்பு, பிஸ்கட், எண்ணெய் போன்ற பொருட்கள் தொழிற்சாலைகளிலிருந்து கடைகளுக்கு வரும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால், அவற்றின் விலையும் உயரக்கூடும்.
வாடகை வாகனங்கள்: ஆட்டோ, கால் டாக்சி மற்றும் ஊபர்/ஓலா போன்ற சேவைகளின் கட்டணம் உயரும். பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்வால் வாடகை வாகன கட்டணங்கள் உயர போகின்றன. தனியார் பேருந்து கட்டணங்கள் மற்றும் சரக்கு லாரி வாடகைகள் அதிகரிக்கப்படும்.
சிமெண்ட் மற்றும் செங்கல்: இவை மிகவும் கனமான பொருட்கள் என்பதால், இவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல அதிக டீசல் தேவைப்படுகிறது. எனவே, வீடு கட்டும் செலவு அதிகரிக்கும்.
பெயிண்ட் (Paints): பெயிண்ட் தயாரிப்பில் கச்சா எண்ணெய் (Crude oil) துணைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, எண்ணெய் விலை உயர்வு பெயிண்ட் விலையையும் பாதிக்கும்.
உணவு டெலிவரி: ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற தளங்களில் 'டெலிவரி கட்டணம்' அதிகரிக்கப்படலாம். சமையல் எரிவாயு மற்றும் காய்கறிகளின் விலை உயர்வதால், ஹோட்டல்களில் உணவுகளின் விலை உயர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications

