இந்தியாவில் ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேசச் சந்தையில் இருக்கும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலர் மதிப்பு ஆகியவற்றைப் பொருத்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதன்படி செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து 3வது நாளாக இன்று வியாழக்கிழமையும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் தினசரி மக்கள் வாங்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், போக்குவரத்துச் செலவுகள் என அனைத்தும் விலை உயர்ந்துள்ளதால், மக்களின் தினசரி வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 பைசாவும், டீசல் 30 வரையில் உயர்த்தப்பட்டு உள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
வரலாற்று உச்ச விலை
எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ள விலை உயர்வின் மூலம் வரலாறு காணாத விதமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 87.85 ரூபாய்க்கும், மும்பையில் ஒரு லிட்டர் டீசல் 84.94 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
மேலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பு மாறுபடுவதால் விலை மாறுபடுகிறது. இதன் படி இன்று சென்னையில் விலை நிலவரம் இப்போது பார்க்கலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
புதிய விலை உயர்வின் மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 87.85 ரூபாயாகவும், டீசல் 78,03 ரூபாயாகவும், மும்பையில் பெட்ரோல் 94.36 ரூபாயாகவும், டீசல் 84.94 ரூபாயாகவும், சென்னையில் பெட்ரோல் 90.18 ரூபாயாகவும், டீசல் 83.18 ரூபாயாகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் 89.16 ரூபாயாகவும், டீசல் 81.61 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 61 டாலர் வரையில் உயர்ந்துள்ள காரணத்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக அரபு நாடுகள் 2020ல் ஏற்பட்ட மோசமான வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்பு அளவீடுகளைச் சரி செய்யக் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகளவில் குறைத்துள்ளது.
சர்வதேச சந்தைகள்
உலக நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள், அதன் உற்பத்தியைக் குறைத்துள்ள நிலையில் தேவைக்குப் போதுமான எண்ணெய் கிடைத்தாலும், உபரியாகக் கச்சா எண்ணெய் சந்தையில் இல்லாத காரணமாக இதன் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை
இன்றைய வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் விலை 58.39 டாலராகவும், பிரென்ட் கச்சா எண்ணெய் 61.15 டாலராகவும், OPEC அமைப்பில் இருக்கும் நாடுகளின் கச்சா எண்ணெய் விலை 60 டாலருக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.
மத்திய மாநில அரசு வரி விதிப்பு
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல்-ன் ரீடைல் விற்பனை விலையில், பெட்ரோல் மீதான விலையில் 61 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசு விதிக்கும் வரிகள் தான், இதேபோல் டீசலில் 56 சதவீத தொகை வரிகள் தான். மத்திய அரசுக்கு அதிகளவிலான வருமானம் பெட்ரோல் மற்றும் டீசல் வாயிலாக வரும் காரணத்தால் தொடர்ந்து விலை உயர்ந்தாலும் கட்டுப்படுத்தாமல் உள்ளது.
பட்ஜெட் அறிவிப்பு
பட்ஜெட் அறிவிப்பில் சுங்க வரி குறைக்கப்பட்டு, அக்ரி இன்பரா வரி விதிக்கப்பட்டது மூலம் பெரும் பெட்ரோல், மற்றும் டீசல் விலையில் கணிசமான மாற்றங்கள் இருந்தது. இது மக்களைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றாலும், கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயர்ந்து வருவது சாமானிய மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.