தமிழ்நாடு ,புதுச்சேரி ,கேரளா ,மேற்குவங்கம் , அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பல மடங்கு உயர்ந்திருப்பதால் சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடன் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படும் என தொடர்ச்சியாக தகவல்கள் பரவி வந்தன.
பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்தன. இந்த போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய், எல்பிஜி கேஸ் உள்ளிட்டவை கொண்டுவரப்படவில்லை. உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விலைகள் பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெயை முழுவதுமாக வெளிநாடுகளில் இருந்து தான் கொள்முதல் செய்கிறது.

குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து தான் பெரும்பாலான கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குகிறது. இத்தகைய சூழலில் இரண்டு மாதத்திற்கும் மேலாக இந்தியாவிற்கு வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வராததால் மாற்று ஆதாரங்கள் மூலம் அவற்றை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டு இருக்கிறது. இதனால் இந்தியாவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையிலும் 14 ரூபாயும் ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்பனையிலும் 18 ரூபாய் நஷ்டத்தை சந்திக்கின்றன.
கடந்த ஒரு மாத காலமாகவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என தொடர்ச்சியாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் மத்திய அரசு பொதுமக்கள் மீது நிதி சுமையை சுமத்த விரும்பவில்லை என தொடர்ச்சியாக கூறி வரருகிறது. அதே வேளையில் 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக தான் அரசு காத்திருக்கிறது தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் ,டீசல் விலைகள் பல மடங்கு உயர்த்தப்படும் என தகவல்கள் பரவின, மத்திய அரசு அதையும் திட்டவட்டமாக மறுத்தது.
தற்போது ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் முடிந்து முடிவுகளும் வெளியாகி விட்டன. எனவே மீண்டும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டதாக தகவல்கள் பரவுகின்றன. ஆனால் அதில் உண்மையில்லை என மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இன்றைய தினம் பெட்ரோல், டீசல் விலையில் மாறவில்லை, சில பைசாக்கள் மட்டுமே ஏற்ற இறக்கம் காண்கிறது.
சென்னையை பொருத்தவரை இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.90 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 92.48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.பெங்களூருவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.96 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 90.99 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications

