இந்தியப் பொருளாதாரத்தையும், இந்திய மக்களையும் தற்போது பயமுறுத்தி வரும் முக்கியமான விஷயங்களில் ஒன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான். கடந்த 3 வாரத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 139 டாலர் வரையில் உயர்ந்தது.
இதனால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 ரூபாய் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்திய மக்களுக்குக் குட் நியூஸ் கிடைக்க உள்ளது.
ரூபாய் - ரூபிள் பணப் பரிமாற்றம்
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் ஏற்கனவே வெளியிட்டதன் படி உலக நாடுகள் தடை விதிக்க மறந்த ரஷ்யாவின் சில சிறிய வங்கிகளின் வாயிலாக இந்தியா ரஷ்யா மத்தியிலான பணப் பரிமாற்றத்தைச் செய்ய வழி உருவாகியுள்ளது. இதேபோல் சர்வதேச சந்தைக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து வர்த்தகத்தையும் ரூபாய் - ரூபிள் வாயிலாகச் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.
தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்
இதன் வாயிலாக ரஷ்யா தனது வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியாவிற்குத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களை வழங்க முன் வந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடுத்த காரணத்திற்காக ரஷ்யா மீது தடை விதிக்காத சில முக்கிய நாடுகளில் சீனாவுக்கு அடுத்து இந்தியா மிக முக்கியமானது. இந்நிலையில் ரஷ்யாவின் கோரிக்கையை இந்தியா மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு உள்ளது.
ரஷ்யா எண்ணெய்
கச்சா எண்ணெய் தேவையில் 80% இறக்குமதி செய்யும் இந்தியா, வழக்கமாக ரஷ்யாவிடம் இருந்து 2% முதல் 3% வரையிலான கச்சா எண்ணெய்யை மட்டுமே வாங்குகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வளைகுடா நாடுகள் உடன் நீண்ட கால ஒப்பந்தம் இருக்கும் காரணத்தாலும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதி செய்யும் செலவுகள் அதிகம் என்பதாலும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவுகள் குறைவு.
விலை உயர்வு
ஆனால் இந்த ஆண்டுக் கச்சா எண்ணெய் விலை இதுவரை 40% உயர்ந்துள்ள நிலையில் இதன் தாக்கத்தைக் குறைக்க ரஷ்யாவின் தள்ளுபடி விலை கச்சா எண்ணெய் பெரிய அளவில் உதவும் என்பதல் எவ்விதமான சந்தேகமும் இல்லை. இதனால் லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட வேண்டிய இடத்தில் 5 ரூபாய் உயர்த்தினால் போதுமானதாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
பிரச்சனை
ஆனால் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் சில முக்கியமான பிரச்சனைகளும் உள்ளது. குறிப்பாக ஆயில் டேங்கர், இன்சூரன்ஸ் பாதுகாப்பு, கச்சா எண்ணெய் கலவை போன் பிரச்சனைகள் உள்ளது. இதைச் சரி விரைவில் சரி செய்யும் பட்சத்தில் ரஷ்யாவில் இருந்து அதிகப்படியான தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியும்.