இந்தியாவில் 3 மாதங்களுக்கு அதிகமாகப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 112 டாலரை தாண்டி உள்ளது.
இந்த நிலையில் அடுத்த வாரம் 5 மாநில தேர்தல் முடியும் நிலையில், மத்திய அரசு சர்வதேச சந்தை விலைக்கு இணையாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த துவங்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நவம்பர் மாதம் குறைத்து நாட்டின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவியது. இதைத் தொடர்ந்து 5 மாத தேர்தல் காரணமாக நவம்பர் மாத பாதியில் இருந்து எரிபொருள் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோகமும், கச்சா எண்ணெய் இருப்பு அளவும் உலக நாடுகளில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை தற்போது 112 டாலர் அளவீட்டை கடந்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பின்பு மீண்டும் கச்சா எண்ணெய் விலை இந்த நிலையை அடைந்துள்ளது.
இந்தியா
மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி இந்தியா வாங்கும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 102 டாலராக உள்ளது. வளைகுடா நாடுகள் உடனான நீண்ட கால ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்குச் சில நாடுகள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இந்த 102 டாலர் விலை என்பது ஆகஸ்ட் 2014ஆம் ஆண்டின் உச்ச விலையாகும்.
லிட்டருக்கு 9 ரூபாய்
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா சராசரியாக 81.5 டாலர் விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. கடந்த 3.5 மாதத்தில் கச்சா எண்ணெய் விலை சுமார் 20 டாலர் உயர்ந்து உள்ளது. இதனால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் 9 ரூபாய் வரையில் உயர்த்தப்பட வேண்டும்.
ஜேபி மோர்கன்
அடுத்த வாரம் 5 மாநிலத்தில் தேர்தல் முடியும் நிலையில், இந்த 9 ரூபாய் வித்தியாசத்தைச் சரி செய்ய மத்திய அரசு அடுத்த வாரம் முதல் பெட்ரோல், டீசல் விலையை ஈடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஜேபி மோர்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.