உலகளவில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய்க்கான தேவை உலகளவில் பெரிய அளவில் சரிந்துள்ளது, இதேவேளையில் இந்தியா கொடுத்த நெருக்கடி காரணமாக மே முதல் ஜூன் வரையிலான காலத்தில் சவுதி கூடுதலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இவ்விரு காரணத்தால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறைந்து வருகிறது.
5 மாநில தேர்தல்
கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் குறைய வேண்டும், ஆனால் 5 மாநில தேர்தலுக்கு மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் மார்ச் மாத துவக்கம் முதல் பெரிய அளவிலான மாற்றம் செய்யாமல் தொடர்ந்து ஓரே விலையில் வைத்துள்ளது.
இதன் வாயிலாகத் தற்போது கடந்த 13 நாட்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்விதமான மாற்றத்தையும் செய்யாமல் ஓரே விலையில் வைத்துள்ளது.
2020 லாக்டவுன்
மேலும் நேற்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 31 வரை முடிந்த 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவின் எரிபொருள் தேவை 9.1 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. கொரோனா தொற்றுக்காக நாடு முழுவதும் விதிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாகப் போக்குவரத்து முதல், வர்த்தகம் வரையில் அனைத்தும் முடங்கிய காரணத்தால் கச்சா எண்ணெய் தேவை என்பது பெரிய அளவில் குறைந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு
1998-1999ஆம் நிதியாண்டுக்குப் பின்பு முதல் முறையாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டு அளவுகள் குறைந்துள்ளது. இதன் மூலம் டீசல் பயன்பாட்டு அளவு 12 சதவீதம் குறைந்து 72.72 மில்லியன் டன் ஆகவும், பெட்ரோல் பயன்பாட்டு அளவு 6.7 சதவீதம் குறைந்து 27.95 மில்லியன் டன் ஆகக் குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இதன் வாயிலாக இன்று டெல்லியின் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90.56 ரூபாயாகவும், டீசல் 80.87 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 96.98 ரூபாயாகவும், டீசல் 87.96 ரூபாயாகவும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90.77 ரூபாயாகவும், டீசல் 83.75 ரூபாயாகவும், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 92.58 ரூபாயாகவும், டீசல் 85.88 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூபாய் மதிப்பு
இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ள காரணத்தால் இந்தியா வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை அதிகளவில் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. இன்று நாணய சந்தை வர்த்தகத்தில் ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 75.12 ரூபாயாக உயர்ந்துள்ளது.