இந்தியாவினை பொறுத்தவரையில் கடந்த சில வாரங்களாகவே பெட் ரோல் டீசல் விலையானது உச்சம் தொட்டு வந்தது. சில நகரங்களில் 100 ரூபாயினை கூட எட்டியது.
இந்தியாவினை பொறுத்தவரையில் சுமார் 85 சதவீதம் எண்ணெய் அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சவுதியிடம் இருந்து அதிக இறக்குமதி செய்யப்படுகிறது.
ஆக ஓபெக் நாடுகளில் ஏதேனும் பிரச்சனை என்றால், அது இந்தியாவின் மூலை முடுக்கு வரையில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
15% வரை சப்ளையை குறைக்க முடிவு?
முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, ஏப்ரல் மாதத்தில் நான்கு ஆசிய வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் சப்ளையை 15% வரை குறைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அச்சச்சோ அப்படி எனில் இந்தியாவுக்கும் சப்ளை குறைக்கப்படவுள்ளதா? ஏற்கனவே இங்கு எரிபொருள் விலையானது றெக்கை இல்லாமல் பறந்து கொண்டுள்ளது.
இந்தியாவுக்கு எப்போதும் போல இருக்கும்
தற்போது தான் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், எரிபொருள் தேவையும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்த சமயத்தில் சப்ளை குறைந்தால் விலை என்னவாகுமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் இந்தியர்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், இந்திய சுத்திகரிப்பாளர்களுக்கு சப்ளையை குறைக்க திட்டமிடவில்லை.
உற்பத்தி குறைப்பை நீட்டிக்க திட்டம்
மாறாக எப்போதும்போல சப்ளை இருக்கும் என கூறியுள்ளதாக தெரிகிறது. ஓபெக் நாடுகள் கொரோனா காலகட்டத்தில் உற்பத்தியை குறைத்த நாடுகள், இதனை ஏப்ரல் வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளன. இதன் பிறகு தான் சவுதி அரேபியா இப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
உற்பத்தி குறைப்பு உறுதி
ஏப்ரல் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 1 மில்லியன் பேரல் தன்னார்வ எண்ணெய் உற்பத்தி குறைப்பு செய்யப்படும் என சவுதி அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் சீனாவுக்கும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானியர்களுக்கும் 10 -15% சப்ளை குறைக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
அதிகம் தர முடியாது?
இந்தியா வழக்கத்திற்கு மாறாக கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகமாக கேட்டுள்ளதாகவும், ஆனால் சவுதி அராம்கோ தற்போது நிராகரித்துள்ளதாகவும் இடி செய்திகள் கூறுகின்றது. எனினும் மாத சராசரி ஏற்றுமதி இருக்கும் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது. எப்படி இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
தொடர்ந்து 13 வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை. இந்த நிலையில் டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.91.17ம் மும்பையில் - ரூ.97.57, சென்னையில் ரூ.93.11, பெங்களுரில் ரூ.94.29, ஹைத்ராபாத்தில் ரூ.94.79 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே டெல்லியில் டீசல் விலை ரூ.81.47ம், மும்பையில் - ரூ.88.60, சென்னையில் ரூ.86.45, பெங்களுரில் ரூ.86.42ம், ஹைத்ராபாத்தில் ரூ.88.86க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.