இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வடைந்து வரும் காரணத்தால் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த துவங்கியுள்ளது. குறிப்பாக உணவு பொருட்கள் தயாரிப்பில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் விலையைக் கட்டாயம் உயர்த்தியாக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது.
Recommended Video
இதனால் மக்கள் அதிகப் பணத்தைக் கொடுத்துப் பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் கடந்த 15 நாட்களில் 13வது முறையாகப் பெட்ரோல் டீசல் விலை இன்று தலா 80 பைசா வரையில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மார்ச் 22க்கு பின்பு எரிபொருள் விலை லிட்டருக்கு 9.20 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
திங்கட்கிழமை காலையில் 99 டாலராக இருந்த WTI கச்சா எண்ணெய் விலை இன்று 1.16 சதவீதம் உயர்ந்து 104.5 டாலராக உயர்ந்துள்ளது, இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.26 சதவீதம் அதிகரித்து 108.9 டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் விலையும் 110 டாலரை நெருங்க உள்ளது.
அமெரிக்க அரசு
அமெரிக்க அரசு தன் நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்கத் தனது அவசர காலச் சேமிப்பில் இருந்து 1 மில்லியன் பேரல் அளவிலான கச்சா எண்ணெய்யை மக்களின் பயன்பாட்டுக்காக வெளியிட முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த முடிவு மிகவும் தவறானது எனக் கருத்து நிலவி வரும் சூழ்நிலையில் மாற்றுத் திட்டத்தை யோசிக்கத் துவங்கியுள்ளது.
மத்திய அரசு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவிலும் இதன் விலை தொடர்ந்து உயர மட்டுமே வாய்ப்பு உள்ளது. எரிபொருள் விலையைக் குறைக்க மத்திய அரசு எவ்விதமான முயற்சிகளையும் எடுக்காத நிலையில் தொடர்ந்து அதிகப்படியான சுமையை இந்திய மக்களும், இந்திய நிறுவனங்களும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ரஷ்யா கச்சா எண்ணெய்
ஆனால் ரஷ்யா கச்சா எண்ணெய் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் போது கட்டாயம் பெட்ரோல், டீசல் விலை குறையும், ஆனால் அதற்கான விலை குறைப்பை மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அளிக்க வேண்டும் இல்லையெனில் தொடர்ந்து உயர்வாகவே இருக்கும்.
சென்னை பெட்ரோல், டீசல் விலை
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 பைசா அதிகரித்து 108.96 ரூபாயாக உள்ளது. இதேபோல் மும்பையில் 84 பைசா உயர்ந்து 118.41 ரூபாயாக உள்ளது. மேலும் டீசல் விலை சென்னையில் 38 பைசா அதிகரித்து 99.42 ரூபாயாக உயர்ந்துள்ளது, மும்பையில் 43 பைசா அதிகரித்து 103.07 ரூபாயாக உள்ளது.