சீனாவில் முதல் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்று சுமார் 199 நாடுகளில் மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் தற்போது 6,63,740 பேர் கொரோனாவில் தாக்கம் அடைந்துள்ளனர். இதே உலகம் முழுக்க 30,879 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் சீனாவில் முதன் முதலாக தோன்றிய இந்த வைரஸானது தற்போது அதன் தாக்கம் அங்கு குறைந்திருந்தாலும், மற்ற நாடுகளில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.
சீனாவில் தேவை குறைவு
இந்த நிலையில் உலகளவில் கச்சா எண்ணெய் நுகர்வில் முக்கிய பங்கு வகிக்கும் சீனாவில் அதன் தேவை குறைந்த காரணத்தினால், கச்சா எண்ணெய் விலை அப்போது பலமாக வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் தற்போது அங்கு தாக்கம் குறைந்து இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து தேவை குறைந்து வருகிறது
இதனால் கச்சா எண்ணெய் விலையானது தேவை குறைவால் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இதற்கிடையில், ரஷ்யா ஒபெக் நாடுகளும் உற்பத்தி குறைப்புக்கு ஒத்துழைக்காததால் விலை இன்னும் பலத்த வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் எண்ணெய் ஜாம்பவான் ஆன சவுதி அரேபியா எண்ணெய் விலையில் விலை யுத்ததினை கொண்டு வரும் அளவுக்கு ஒரு திட்டத்தினை வெளியிட்டது.
விலை குறைவில் எரிபொருள்
அதாவது தங்களிடம் எண்ணெய் வாங்குபவர்களுக்கு 20 வருட விலை குறைவில் கொடுக்கப்போவதாக தெரிவித்தது. இதனால் கச்சா எண்ணெய் விலையில் நிச்சயம், விலையுத்தம் வருமென மற்ற உற்பத்தி நாடுகள் பயந்தன. இதனால் அவர்களும் தங்களது உற்பத்தியை அதிகரிக்க இது வழிவகுத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையில் நிச்சயம் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம்
இதனையடுத்து தனது மொத்த தேவையில் 80% எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவிலும் தற்போது கொரோனாவின் தாக்கம் ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது. ஒரு புறம் இதனால் இங்கும் தேவை அதிகளவில் குறைந்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையானது படு வீழ்ச்சி கண்டு வருகிறது.
எரிபொருள் விலை
கடந்த மார்ச் 1 அன்று சென்னையில் 74.51 ரூபாயாக இருந்த பெட் ரோல் விலையானது, மார்ச் 29 ஆன இன்று 72.28 ஆக மட்டுமே குறைந்துள்ளது. ஆகமொத்தம் 3.09% மட்டுமே வீழ்ச்சி கண்டுள்ளது. இதே சர்வதேச சந்தையில் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8% மேலாக வீழ்ச்சி கண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் சர்வதேச சந்தையில் விலை 5% வீழ்ச்சி கண்ட பேரலுக்கு 25 டாலருக்கும் கீழாக வர்த்தகமாகி வருகிறது. இதே மார்ச் முதல் தேதியிலிருந்து ஒப்பிடும்போது இது 30% மேல் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. .
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை
கச்சா எண்ணெய் விலை இப்படி படு வீழ்ச்சி கண்டு வந்தாலும், கடந்த 13 தினங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இன்றியே வர்த்தகம் ஆகி வருகின்றது. இதுமட்டும் அல்ல, இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால் வாகனங்களுக்கான எரிபொருள் தேவையில் 70 - 80% குறைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
விலை பெரிதும் எதிரொலிக்கவில்லை
இதே நிறுவனங்களும் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளதால் அவற்றின் எண்ணெய் பயன்பாடும் குறைந்துள்ளது. எனினும் கடந்த வாரத்தில் அதிகரிக்கப்பட்ட வரி விகிதம் அதிகரிப்பினால் விலை குறைப்பின் எதிரொலி எண்ணெய் விலையில் அவ்வளவாக எதிரொலிக்கவில்லை எனலாம். இன்று நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் எவ்வளவு தான் விலை குறைந்தாலும், ஏற்றம் கண்டாலும் அது மக்களை பெரிதும் பாதிக்காது என்றாலும், வரும் காலத்தில் இப்படியே இருந்தால் அது மக்களுக்கும் பெரிதும் பயனை அளிக்காது.