உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான இந்தியாவில், கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் என்பது மிக வேகமாக குறைந்து வருகின்றது. இதனையடுத்து எரிபொருளுக்கான தேவையும் மீண்டு வந்து கொண்டுள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவில், சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை ஏற்றம் அப்படியே தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அப்படி இருக்கையில் இங்கு தொடர்ச்சியாக சர்வதேச சந்தையின் எதிரொலியாக எரிபொருள் விலையானது அதிகரித்து வருகின்றது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு மத்தியில், டீசல் விலையும் பல இடங்களில் 100 ரூபாயினை தாண்டியுள்ளது.
தேவை மீள்ச்சி
தற்போது நாட்டில் இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசியும் மிக வேகமாக போடப்பட்டு வருகின்றது. இது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சரிவினைக் கண்ட தொழிற்துறை வளர்ச்சியும் சாதகமான வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதனால் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
அதே நேரம் விலையை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் WTI கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 1.79% அதிகரித்து, 83.98 டாலர்களாக முடிவடைந்துள்ளது. இதேபோல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலையும் பேரலுக்கு, 1.31% அதிகரித்து, 85.72 டாலராக முடிவடைந்துள்ளது.
ஏற்ற தாழ்வு?
பெட்ரோல் டீசல் விலையானது மாநிலத்துக்கு மாநிலம் வரி வித்தியாசத்தினால், விலை ஏற்றத்தாழ்வில் காணப்படுகிறது. சமீபத்தில் விலையை கட்டுக்குள் வைக்க சில மாநிலங்களில் வரி விகிதமானது சற்று குறைக்கப்பட்டாலும், இன்னும் பல மாநிலங்களில் வரி விகிதங்கள் அதிகமாகவே உள்ளன. இதனால் விலையானது சர்வதேச அளவில் குறைந்தாலும், இந்தியாவில் குறைவதில்லை.
வரி விகிதமும் அதிகம்
இந்தியாவினை பொறுத்தவரையில் கச்சா எண்ணெய் விலையோடு சேர்த்து, மக்கள் அதிகளவு வரியினையும் செலுத்துக்கின்றனர். கடந்த ஆண்டில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்ட நிலையில், அரசு லிட்டர் பெட்ரோலுக்கு 21.58 ரூபாய் வரியும், டீசலுக்கு 19.18 ரூபாயும் வரியும் அதிகரித்த பிறகு, பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத விலையை எட்டியது. மொத்தத்தில் பெட்ரோலுக்கு வரியாக 32.90 ரூபாயும், டீசலுக்கு வரியாக 31.80 ரூபாயும் விதிக்கப்படுகிறது.
உற்பத்தி குறைப்பு
கடந்த ஆண்டே கொரோனா பரவலின் காரணமாக, கச்சா எண்ணெய் தேவையானது பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்போது விலை வரலாறு காணாத சரிவினைக் கண்டது. அந்த சமயத்தில் உற்பத்தியும் அதிகமாக இருந்த நிலையில், உற்பத்தி குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேவையானது மீண்டு வரும் நிலையில், உற்பத்தி அதிகரிக்கபபடவில்லை. ஆக இதுவும் விலை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்
பெட்ரோல்
டெல்லி - ரூ.105.74
கொல்கத்தா - ரூ.108.11
மும்பை - ரூ.113.46
சென்னை - ரூ.104.63
பெங்களுர் - ரூ.111.34
டீசல்
டெல்லி - ரூ.96.22
கொல்கத்தா - ரூ.99.43
மும்பை - ரூ.104.38
சென்னை - ரூ.100.74
பெங்களுர் - ரூ.102.23