இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் மக்களுக்குச் சாதகமாக மாறி வருகிறது. இந்நிலையில் 45 நாட்களில் 2 முறை விலை சரிந்த பின்பு கடந்த 4 நாட்களாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலைப்பெற்றுள்ளது.
இதன் மூலம் இன்று நாட்டின் தலைநகரான டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90.56 ரூபாயும், டீசல் 80.87 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பெட்ரோல் மும்பையில் 96.98 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 90.77 ரூபாய்க்கும், சென்னையில் 92.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிப்ரவரி மாதம் முதல்
பிப்ரவரி மாதம் முதல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 7 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் பெட்ரோல் விலை 4.22 ரூபாயும், டீசல் விலை 4.34 ரூபாய் என 14 முறைகளில் விலை உயர்ந்துள்ளது. ஆனால் பிப்ரவரி 27க்குப் பின் எரிபொருள் விலை உயரவில்லை.
கச்சா எண்ணெய் விலை
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள மாற்றத்திற்கு ஏற்ப இந்திய ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைந்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை
இந்தக் குறைப்பிற்குப் பின் கடந்த 4 நாட்களாக எரிபொருள் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நிலைப்பெற்று உள்ளது. செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு மூலம் பெட்ரோல் விலை 22 பைசாவும், டீசல் 23 பைசாவும் குறைந்துள்ளது சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் பெறும் அளவிலான வரவேற்பு பெற்றுள்ளது.
5 மாநில தேர்தல்
2021ஆம் ஆண்டில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு சுமார் 24 நாட்கள் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் மார்ச் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் விலை குறைந்தது. இதன் பின்பு 5 நாட்கள் இடைவேளையில் மார்ச் 30ஆம் தேதி மீண்டும் விலை குறைந்தது.