ஈரான் போர் காரணமாக இந்தியாவில் ஐந்தாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக தொடர்ந்து இரண்டாவது நாளாக பெட்ரோல் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. சென்னை பொறுத்தவரை இன்றைய தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 108.01 ரூபாய்க்கும் டீசல் விலை லிட்டருக்கு 99.78 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை நெருங்கி விட்டது பெட்ரோல் விலை 110 ரூபாயை நெருங்கி வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது அத்துடன் நின்று போவது கிடையாது பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் தானாகவே நம் நாம் அன்றாட பயன்படுத்தக்கூடிய பல்வேறு பொருட்களின் விலைவாசி உயரும். இது நேரடியாகவே நம்முடைய மாதாந்திர பட்ஜெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும்.

எங்கோ ஒரு நாட்டில் போர் நடக்கிறது என இனி நாம் அதனை கண்டு கொள்ளாமல் இருந்துவிட முடியாது. ஏனெனில் எங்கோ ஒரு நாட்டில் நடக்கக்கூடிய போர் தான் உங்களுடைய வீட்டு காய்கறி செலவில் தொடங்கி பால் ,முட்டை ,மளிகை பொருள் ,போக்குவரத்து என அனைத்து செலவுகளையும் உயர்த்த செய்திருக்கிறது. இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெயை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து பெட்ரோல், டீசல் ஆக மாற்றி பயன்படுத்துகிறது.
குறிப்பாக பெரும்பாலான கச்சா எண்ணெயை நாம் வளைகுடா நாடுகள் மற்றும் ஈரானில் இருந்து தான் வாங்கி வந்தோம். போர் காரணமாக பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பிறகு வளைகுடா நாடுகள் மற்றும் ஈரானிடம் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வந்து சேரவில்லை. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது இதனால் முன்பை விட அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கி அதிக செலவு செய்து அவற்றை பெட்ரோல் டீசல் ஆக மாற்றி தான் இந்தியன் ஆயில் ,பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்பி ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.
இரண்டரை மாத காலமாக பெட்ரோல், டீசல் விற்பனையில் நஷ்டத்தை ஏற்றுக் கொண்டு வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த மாதத்தில் இருந்து படிப்படியாக விலையை உயர்த்த தொடங்கிவிட்டன. அந்த வகையில் இந்தியாவில் ஐந்தாவது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. பெட்ரோல், டீசல் விலை இப்படி தொடர்ச்சியாக குறுகிய காலத்திலேயே உயர்வது என்பது பொதுமக்களுக்கு நல்ல செய்தி கிடையாது. ஏனெனில் இதன் காரணமாக வரும் நாட்களில் உணவு ,போக்குவரத்து சேவைகள் மற்றும் உற்பத்தி துறைகள் முழுவதுமே இந்த விலை உயர்வு பரவும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்வு படிப்படியாக பொருளாதாரத்தின் அனைத்து மட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக உலக சந்தையில் பேரலுக்கு ஒவ்வொரு 10 டாலர் உயரும் போதும் இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 35 அடிப்படை புள்ளிகள் உயர்கிறது என எம் கே குளோபல் நிறுவனத்தின் பொருளாதார நிபுணரான மாதவி தெரிவிக்கிறார். இவர் இனிவரும் நாட்களில் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வது நிச்சயம் என அடித்து கூறுகிறார்.
முதலில் நம்முடைய உணவில் தான் தாக்கத்தை ஏற்படுத்துமாம். ஏனெனில் கிராமங்களில் இருந்து காய்கறிகளை விளைவித்து நகர்புறங்களுக்கு கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு அதிகரித்து இருக்கிறது. அதேபோல மளிகை சாமான்கள் போக்குவரத்து செலவும் உயர்கிறது. பால் ,முட்டை , பழங்கள் என நாம் அன்றாடம் உணவாக எடுத்துக் கொள்ளக்கூடிய பல்வேறு பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு அதாவது உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து சந்தைக்கும் அங்கிருந்து சில்லறை விற்பனை கடைகளுக்கும் கொண்டும் செல்லும் செலவு அதிகரிக்கும். எனவே அவற்றின் விலை வாசி தான் முதலில் உயரும். மளிகை, காய்கறி, பால் உள்ளிட்டவற்றுக்கு இனி நீங்கள் கூடுதல் செலவு செய்வீர்கள்.
அடுத்ததாக போக்குவரத்து செலவு, நம் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு ,பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரக்கூடிய அன்றாட செலவு உயரும். நீங்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் சற்றே தப்பிக்கலாம் கார், பைக் பயன்படுத்தினால் சிக்கல் தான்.
வாடகை வாகன செலவுகள் உயரும், நீங்கள் உங்களுடைய குழந்தைகளை ஆட்டோ அல்லது பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு அனுப்புகிறீர்கள் என்றால் அதற்காக நீங்கள் செலுத்தக்கூடிய மாதாந்திர கட்டணம் இனி உயரும். ஓலா, ஊபர், ரேபிடோவை அதிக பயன்படுத்துகிறீர்கள் என்றால் முன்பை விட அதிக கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். பெட்ரோல், டீசல் மட்டுமல்ல சிஎன்ஜி விலை உயர்வும் இதுக்கு காரணம்.
ஆன்லைன் ஆர்டர்: இந்தியாவில் தற்போது உணவு டெலிவரி மற்றும் குயிக் காமர்ஸ் தளங்கள் மூலம் உணவுப் பொருட்கள் பால் உள்ளிட்டவற்றை வாங்குவது வேகமாக அதிகரித்து வருகிறது. அப்படி பார்க்கையில் உங்களுடைய ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட், சோமேட்டோ, பிளிங்கிட், செப்டோ போன்ற ஆன்லைன் ஆர்டர்களுக்கு முன்பை விட கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.
அடுத்ததாக நீங்கள் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்கிறீர்கள் அல்லது சுற்றுலா செல்ல திட்டமிடுகிறீர்கள் என்பன போன்ற போக்குவரத்து செலவுகள் இனி நிச்சயமாக அதிகரிக்கும். பல இடங்களில் சுங்க கட்டணங்களும் உயர்வு கண்டிருப்பதால் இந்த கட்டண உயர்வு அதிகமாகவே இருக்கும்.
மேலும் பல்வேறு மூலப்பொருட்களின் போக்குவரத்துக்கான கட்டணம் உயர்கிறது என்பதால் சிமெண்ட், ஸ்டீல் ,ரசாயனங்கள் மற்றும் பல்வேறு நுகர்வோர் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் விலைவாசி இனிவரும் நாட்களில் நிச்சயம் உயரும்.
எனவே பொதுமக்கள் தங்களுடைய மாதாந்திர பட்ஜெட்டில் இத்தனை மாதங்களாக செலவு செய்ததை விட இனி கூடுதலான பணத்தை செலவு செய்ய போகிறார்கள். வழக்கமாக 50000 ரூபாய் செலவாகிறது என்றால் அது 55000 ரூபாய்க்கு மேல் உயரும். எனவே ஈரான் போர் முடியும் வரை நமக்கு சோதனை காலம் தான்.


Click it and Unblock the Notifications


