கொரோனா தொற்று காரணத்தால் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள இந்தச் சூழ்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது என்றால் மிகையில்லை. மேலும் தொற்று அதிகமாக இருக்கும் பல மாநிலங்கள் முழு ஊரடங்களை விதிக்கத் திட்டமிட்டு ஆலோசனை செய்து வருகிறது.
ஒரு பக்கம் கொரோனா, மறுபக்கம் வேலைவாய்ப்புகள், வருமானம் குறைந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கும் மக்கள் என இந்த இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு தனது வருவாய் இலக்கு அடைவதற்காகவும், விலை உயர்வின் சுமையை ஏற்க மனமில்லா காரணத்திற்காகவும் எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது.
5 மாநில தேர்தல்
இந்தியாவில் 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் சுமார் 6 வாரக் காலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மக்களுக்குச் சாதகமானதாகவும், எவ்விதமான விலை உயர்வையும் அறிவிக்காமல் வைத்திருந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பின்பு தினமும் விலையை உயர்த்தி வருகிறது.
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்
தற்போது சர்வதேச சந்தையில் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை 65 டாலர் என்ற அளவீட்டைத் தாண்டி 66 டாலரைக் கடந்துள்ளது. இதன் பாதிப்பு தான் தற்போது 3 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தப்பட்டு வருகிறது.
விலை உயர்வு
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யப் பல நாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நிலையில் இந்திய பேஸ்க்ட் கச்சா எண்ணெய் விலை நேற்றை அளவீட்டின் படி 66.63 டாலராக உள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி இதன் விலை 61.27 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
WTI மற்றும் பிரென்ட் கச்சா எண்ணெய்
இதேவேளையில் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 65.72 டாலருக்கும், பிரென்ட் கச்சா எண்ணெய் 69.11 டாலருக்கும், OPEC நாடுகளின் கச்சா எண்ணெய் 66.67 டாலருக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை
இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 பைசா உயர்ந்து 92.90 ரூபாய்க்கும், டீசல் விலை 26 பைசா உயர்ந்து 86.35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதோடு கடந்த 3 நாட்களில் பெட்ரோல் விலை சுமார் 47 பைசா உயர்ந்துள்ளது. மேலும் டீசல் விலை கடந்த 3 நாட்களில் 60 பைசா உயர்ந்துள்ளது